71. கடல்


71.  கடல்
x
தினத்தந்தி 28 March 2017 12:00 AM GMT (Updated: 27 March 2017 12:21 PM GMT)

கடல், பூமிப் பரப்பில் 70 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள உப்பு சுவை கொண்ட நீர் நிலையாகும்.

அறிவோம் இஸ்லாம்

- பாத்திமா மைந்தன்


டல், பூமிப் பரப்பில் 70 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள உப்பு சுவை கொண்ட நீர் நிலையாகும். இதனால் பூமியை ‘நீர்க்கோள்’ என்றும், ‘நீல வண்ணக்கோள்’ என்றும் அழைக்கிறோம். பூமியின் பருவ நிலையை நிலைப்படுத்துவதோடு நீர் சுழற்சி, கரிமச் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி ஆகியவற்றிலும் கடல் நீர், முதன்மைப் பங்காற்றுகிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகுதல், பருவ மழை பெய்தல் ஆகியவற்றுக்கு கடல் நீரின் பங்கு முக்கியமானதாகும்.

அது– ‘ஆழி’, ‘விரிநீர்’, ‘பெருநீர்’, ‘பருநீர்’, ‘நிலை நீர்’ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

கடலுக்கு ‘முந்நீர்’ என்ற பெயரும் உண்டு. மழைநீர், ஆற்று நீர், நிலத்தடி நீர் சேருதலால் முந்நீர் என்ற பெயர் வந்தது. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகியவை செய்தலாலும் அது முந்நீர் ஆனது.

பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்ட்டிக் பெருங்  கடல் என்று 5 பெருங்கடல்கள் உள்ளன. இவை தவிர அரபிக்கடல், வங்காள விரிகுடா கடல், கருங்கடல், செங்கடல், மத்தியத் தரைக்கடல், காஸ்பியன் கடல், கரீபியன் கடல், மர்மரா கடல், பாரசீக வளைகுடா போன்ற சிறிய கடல்களும் உள்ளன.

‘கடல்’ என்ற சொல்லானது ‘கடத்தற்கு அரிய தென்று’ பொருள்படும். ‘நீந்திக் கடத்தற்கு அரியது’ என்பதாகக் கருதலாம்.

இறைவன் படைப்பில் அனைத்துமே அதிசயம்; அதிலும் கடல்கள் மாபெரும் அதிசயம்; அந்தக் கடல்களுக்கு மத்தியில் தடுப்பு ஏற்படுத்தி இருப்பதாக திருக்குர்ஆனில் இறைவன் கூறி இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.

‘‘இரு கடல்களையும் அவனே சந்திக்கச் செய்தான். ஆயினும் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு தடுப்பு இருக்கின்றது. அதை அவை மீறுவதில்லை’’ (59:19) என்றும்,

‘‘இந்தப் பூமியை வசிக்கத்தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும், இரு கடல்களுக்கு இடையே  தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலானோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்’’ (27:61) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.

எங்கெல்லாம் இருவேறு கடல்கள் கலக்குமோ அந்தக் கடல்களுக்கு மத்தியில் தடுப்பு இருப்பதாக இன்றைய தினம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘தடுப்பு’ என்பது திடப்பொருளால் ஆன தடுப்பு அல்ல. இரு கடல்களுக்கு இடையே கண்ணுக்கு புலப்படாத வகையில் ஒரு ‘நீர்த் தடுப்பு’ உள்ளது. இதன் காரணமாக இரு கடல்களின் தனித்தன்மையில் எந்தவித மாற்றமும் ஏற்படுவது இல்லை.

மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் கடலுக்கும் இடையே உள்ள தடுப்பு உள்பட பல்வேறு  இடங்களில் இந்த அற்புத நிகழ்வு ஏற்படுகின்றது.

மத்தியத் தரைக்கடலும், அட்லாண்டிக் கடலும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தாலும் அதன் தட்ப வெப்ப நிலை, உப்புத் தன்மை, அடர்த்தி ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை.

கடல் நீரின் சராசரி ஆழம் 4 கிலோ மீட்டர். மிக அதிகமான ஆழம் 11 கிலோ மீட்டர். இது பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா பள்ளத்தாக்கு ஆகும். எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தைக் காட்டிலும் இது கடலுக்கு அடியில் அதிக ஆழம் கொண்டதாகும்.

ஆழ் கடலில் ஏற்படுகின்ற இருட்டைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது.

‘‘அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும். அதனை ஓர் அலை மூடு கிறது. அதற்கு மேல் மற்றொரு அலை; அதற்கு மேலே மேகம். (இப்படி) பல இருள்கள்; சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை’’. (24:40)

இந்த வசனத்தில் இறை நிராகரிப்பாளர்களை இறைவன் ஆழ் கடலின் இருளுக்கு உவமையாக கூறுகின்றான்.

கடலுக்குள் ஒருவன் மூழ்கும்போது, ஆழம் செல்லச்செல்ல இருள் அதிகரித்துக் கொண்டே சென்று, முடிவில் தன் கையைக் கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண இயலாத அளவுக்கு ‘இருட்டாக’ இருக்கும் என்று இந்த வசனம் கூறுகிறது.

கடலில் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் மனிதனோ அல்லது அவன் கண்டுபிடித்த உபகரணங்களோ செல்ல முடியவில்லை என்பதே உண்மை. காரணம் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் வெளிச்சம் உட்புக முடியாததாலும், நீரின் அழுத்தம் அதிகரிப்பதாலும் ஏற்படும் பாதிப்புகளைக் களைய இன்னும் நவீன எந்திரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேற்கண்ட (24:40) வசனம், ஆழ்கடலில் இருள் மட்டுமல்ல; அலைகளும் இருப்பதாகக் கூறுகின்றது.

பொதுவாக கடலின் மேற்புறத்தில் காற்றின் தாக்கத்தால் அலைகள் உருவாகின்றன. இரவில் சந்திரனின் ஈர்ப்பின் காரணமாகவும் அலைகள் எழும்புகின்றன. இந்த அலைகள் எல்லாம் கடலின் மேற்பரப்பில் நிகழ்பவை.

ஆழ்கடலின் ஆழத்தில் உள்ள வெப்பநிலை, அடர்த்தி, உப்புத் தன்மைக்கு ஏற்றவாறு வெவ்வேறு அடர்த்தியுள்ள நீர் ஒன்று சேரும் இடங்களில் ஆழத்தில் பெரும் அலைகள் உருவாகின்றன. இவை சுமார் 100 மீட்டர் (330 அடி) பிரமாண்ட உயரமும், பல நூற்றுக்கணக்கான மைல் நீளமும் நீண்டு செல்லும். இந்த அலைகள் கடற்பரப்பில் நம் கண்களுக்குத் தெரியாது.

இருந்தபோதிலும் பல்வேறு கடல் பகுதிகளின் ஆழத்தில் அலைகள் உருவாகின்றன என்பதற்குச் செயற்கைக் கோள் படங்கள் நமக்கு சாட்சியாக– அத்தாட்சியாக உள்ளன.

(தொடரும்)

Next Story