திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 2 Sep 2017 10:30 PM GMT (Updated: 2 Sep 2017 9:49 PM GMT)

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற கோவிலாகவும் இது விளங்குகிறது. நவகிரகங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர் குருபகவான். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி குருபகவானுக்கு உண்டு. இதனால் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டாயிற்று. எல்லா சிவாலயங்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது.

ஆனால் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் சாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் தனி விமானத்துடன் ராஜகுருவாக நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய அமைப்பு உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லை. சிறப்பு வாய்ந்த குருபகவான் ஆண்டிற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம். இதனால் அவரவர் ராசிக்கு ஏற்ப பலன்கள் ஏற்படும். அதன்படி இந்த ஆண்டு குருபகவான் கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு நேற்றுகாலை 9.31 மணிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.

திட்டையில் குருபகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து குருபகவானை தரிசனம் செய்தனர். இதில் நவநீதகிருஷ்ணன் எம்.பி., இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி, தக்கார் முரளிதரன், ஆய்வாளர் மனோகரன், செயல்அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் எளிதாக குருபகவானை தரிசனம் செய்வதற்கு வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சிறப்பு வழி, பொது வழி என 2 வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

குருபெயர்ச்சியையொட்டி பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களுக்காக திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் வருகிற 8-ந் தேதி லட்சார்ச்சனையும், 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை சிறப்பு குரு பரிகார ஹோமமும் நடக்கிறது. இதில் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம் ஆகும். விழாவையொட்டி தஞ்சையில் இருந்து திட்டைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மருத்துவமுகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு முகாமும் நடத்தப்பட்டது.

Next Story