எக்காளத் திருவிழா


எக்காளத் திருவிழா
x
தினத்தந்தி 20 March 2018 9:44 AM GMT (Updated: 20 March 2018 9:44 AM GMT)

விவிலியத்தில் ‘எக்காளம்’ என்ற சொல் வலிமையின் அடையாளமாகவும், இறைசெய்தியின் அடையாளமாகவும் குறிப்பிடப்படுகிறது.

விவிலிய விழாக்களில் ஐந்தாவதாக வருகின்ற விழா எக்காளத் திருவிழா என அழைக்கப்படுகிறது. ‘எக்காளம்’ என்பது ஒரு கருவி. அது விலங்கின் கொம்பினாலோ அல்லது வெள்ளி போன்ற உலோகங்களினாலோ உருவாக்கப்படக் கூடிய ஒரு கருவி.

விவிலியத்தில் ‘எக்காளம்’ என்ற சொல் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. வலிமையின் அடையாளமாகவும், இறைசெய்தியின் அடையாளமாகவும் எக்காளம் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

எக்காளப் பண்டிகையைக் குறித்து விவிலியம் குறிப்பிடுகின்ற செய்தி இவ்வளவு தான், “ஏழாம் மாதம் முதல்நாள் உங்களுக்கு ஓய்வு நாள்; அதைத் திருப்பேரவையாகக் கூடி எக்காளம் ஊதிக் கொண்டாடுங்கள். எத்தகைய வேலையும் அன்று செய்யாமல் ஆண்டவருக்கு நெருப்புப் பலி செலுத்துங்கள்”

ஏழாவது மாதத்தை யூதர்கள் ‘திசிரி மாதம்’ என அழைக்கின்றார்கள். அவர்களுடைய மாதங்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தான் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன நாள்காட்டியின் படி இது புத்தாண்டின் தொடக்க நாள். எனவே புத்தாண்டு விழா என்றும் இப்போது அழைக்கப்படுகிறது.

விவிலியத்தின் முக்கியமான பண்டிகைகள் ஏழு. எல்லாமே இயேசுவின் வாழ்வோடு தொடர்புடையவை. இயேசு அருள்கின்ற மீட்போடு தொடர்புடையவை. முதல் நான்கு பண்டிகைகளான பாஸ்கா விழா, புளிப்பில்லாத அப்பப் பண்டிகை, முதற் பலன் விழா, பெந்தேகோஸ்தே விழா ஆகிய நான்கு விழாக்களும் இயேசுவின் முதலாம் வருகையோடு நிறைவு பெற்ற விழாக்கள் !

அடுத்த மூன்று பண்டிகைகளும் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிப்பால் உணர்த்தக் கூடிய பண்டிகைகளாக அமைந்திருக்கின்றன.

ரோஷ் ஹா சனா என எபிரேய மொழியில் அழைக்கப்படும் இந்த விழாவானது இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையை முன்னறிவிக்கும் ஒரு அடையாள ஒலியாக, எச்சரிக்கையின் ஒலியாக ஒலிக்கிறது. முதல் நான்கு விழாக்களும் நடந்து முடிந்தபின் சுமார் நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு இந்த விழா ஆரம்பமாகிறது. இயேசுவின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலம் என இதைக் கருதலாம்.

அறுவடைக்காலத்தின் முடிவு நாட்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. விதைப்பின் காலமும், விளைச்சலின் காலமும் முடிந்து விட, அறுவடையாம் நியாயத் தீர்ப்பின் காலம் வரப்போகிறது என்பதன் குறியீடு அது.

“ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்” என்கிறது 1 கொரிந்தியர் 15:52.

இயேசுவின் முதல் வருகை அமைதியாய் நடந்தது. ஆனால் இரண்டாம் வருகையோ உலகமே அறியும் வகையில் மிகப்பெரிய அளவில் நடக்கும். இதை விவிலியம் இவ்வாறு கூறுகிறது.

“கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்”. இது ஒரு கடைசி எச்சரிக்கை என எடுத்துக் கொள்ளலாம்.

விவிலியத்திலுள்ள திருவெளிப்பாடு நூல் இறைவனின் இரண்டாம் வருகையை குறியீடுகளால் விளக்குகின்ற நூல். அதில் ஏழு எக்காளங்கள் வருகின்றன. கடைசியாக வருகின்ற எக்காளம் இறுதித் தீர்வையில் நிறைவடைகிறது. அதன் பின் எந்த திரும்பிப் பார்த்தலுக்கும், திருந்தி வாழ்தலுக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்பது திண்ணம்.

பழைய ஏற்பாட்டில் எப்போதெல்லாம் எக்காளம் ஊதப்பட்டதோ அப்போதெல்லாம் வாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. யாருமே அசைக்க முடியாத எரிகோ கோட்டை எக்காளத்தின் சத்தத்தினால் தானே இடிந்து தரைமட்டமாகிவிட்டது.

பத்து கட்டளைகளை மோசே இறைவனிடம் பெற்று வரும் போது எக்காளமே அடையாளமானது.

எக்காளம் என்பது அழைப்பு. இயேசு தனது உயிரை நமது பாவங்களுக்காய் கையளித்தபோது புதிய ஏற்பாடு எனும் ஒரு புதிய வாழ்வுக்கான அழைப்பைக் கொடுத்தார். அது ஒரு எக்காளத் தொனி. அந்த அழைப்புக்குச் செவிகொடுத்து அவரது வழியில் நடந்தால் இரண்டாம் வருகையைக் குறித்த அச்சமோ, விண்ணக வாழ்வைக் குறித்த சந்தேகமோ எழத்தேவையில்லை.

எக்காளம், நமக்கு இறைவனிடமிருந்து ஒரு செய்தி இருக்கிறது என்பதன் அடையாளம்.

எக்காளம், எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதன் அடையாளம்.

எக்காளம், போருக்குத் தயாராக வேண்டும் என்பதன் அடையாளம்.

எக்காளம், தலைவர் திரும்ப வருகிறார் என்பதன் அடையாளம்.

எக்காளம், நினைவூட்டுதலின் அடையாளம்.

இறைவனின் வழியில் மகிழ்வோடு நடந்தால் இறைமகனின் எக்காளத் தொனி நமக்கு அக்களிப்பின் தொனியாகக் கேட்கும். இல்லையேல் நரகத்தின் நகக்கீறல்களே நமது ஆன்மாவை ஊடுருவும்.

எக்காளப் பண்டிகை, நிகழப்போவதன் முன்னறிவிப்பு. நாம் எப்படி வாழவேண்டும் என்பதன் எச்சரிக்கை. 

Next Story