சிவசக்தி ரூபத்தில் மூகாம்பிகை


சிவசக்தி ரூபத்தில் மூகாம்பிகை
x
தினத்தந்தி 4 May 2018 10:02 AM GMT (Updated: 4 May 2018 10:02 AM GMT)

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் மூகாம்பிகை, சிவசக்தி சொரூபத்தில் காட்சி தருகிறாள்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, கொல்லூர் மூகாம்பிகை ஆலயம். இந்தக் கோவிலில் மூகாம்பிகை, சிவசக்தி சொரூபத்தில் காட்சி தருகிறாள். மகிஷாசூரனை வதம் செய்த மூகாம்பிகை அம்மன் எழுந்தருளி உள்ள இந்த ஆலயம், மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில், கொடசாத்திர மலை அடிவாரத்தில் ஓடும் வற்றாத ஜீவ நதியான சவுபர்னிகா ஆற்றின் கரையில் இருக்கிறது. தாய் மூகாம்பிகை, ரத்தின கற்களால் ஆன ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார ரூபிணியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

இந்த கோவிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் மத்தியில், தனித்தன்மை வாய்ந்த அதிசயிக்கத்தக்க தங்க நிற கோடு ஒன்று இருக்கிறது. இது லிங்கத்தை சரிபாதியாக பிரிக்கிறது. லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் போது மட்டும் இது ஒளிரும். லிங்கத்தின் வலது பாதி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரையும், இடது பாதி காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த பஞ்சலோக சிலைக்கு ஆதிசங்கரர் அபிஷேகம் செய்து வழிபட்டிருக்கிறார்.

இந்த ஆலயம் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

உடுப்பி, மங்களூரு, பெங்களூருவில் இருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து 458 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. 

Next Story