குபேரனின் குமாரர்கள் வழிபட்ட ஆலயம்


குபேரனின் குமாரர்கள் வழிபட்ட ஆலயம்
x
தினத்தந்தி 10 July 2018 7:09 AM GMT (Updated: 10 July 2018 7:09 AM GMT)

பூலோகமெங்கும் உள்ள சிவாலயங்களில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளின் மீது வைத்து குபேரனின் குமாரர்கள் வழிபட்டனர்.

நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இத்தல இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர். இறைவியின் திரு நாமம் மீனாட்சி. திருவண்ணாமலை யார் அருள் வழி காட்ட குபேரனின் புதல்வர்கள், பொன்வில் சாரத்தின் ரகசியத்தையும் மகிமையையும் உணர்ந்து வழிபட்ட ஆலயம் இது.

சுற்றிலும் தோப்புகளும் வயல் வெளிகளும் உள்ள சூழலில் அமைதி தவழ அமைந்துள்ளது ஆலயம். சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தைச் சுற்றி, உயரமான மதில் சுவர்கள் உள்ளன. மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் முன் உள்ள முகப்பைக் கடந்ததும் நீண்ட நடைபாதையும், அடுத்து இன்னொரு முகப்பும் உள்ளது.

அதையடுத்து அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் உள்ளன. நந்தியும் பீடமும் மகாமண்டபத்தின் நடுவே அமைந்திருக்கிறது. அடுத்துள்ள அர்த்த மண்டபம் காணப்படுகிறது. கருவறையில் இறைவன் சுந்தரேஸ் வரர் லிங்கத்திருமேனியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஐந்தடி உயரத்தில், கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராய் இறைவன் வீற்றிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

ஆம். இத்தல இறைவனின் திருமேனி முற்றிலும் மரகதத்தால் ஆனது. எனவே இத்தல லிங்கம் ‘மரகத லிங்கம்’ என்றே அழைக்கப்படுகிறது. அர்ச்சகர் கற்பூர தீபாரதனை காட்டும் போது அந்த ஒளி இறைவனின் திருமேனியில் பட்டு, இறைவன் திருமேனி பளபளவென ஜொலிக்கும். இந்த அழகைக் கண்டு நம் மனம் வியந்து பக்திப் பரவசப் படுவதை தவிர்க்க இயலாது. அந்த கரும்பச்சை மரகத மேனியால் ஆன மரகத லிங்கத்தின் முன் நின்று நாம் தரிசனம் செய்யும் போது மெல்லிய அதிர்வலைகள் நம் மனதிற்குள் ஏற்படுவதை நம்மால் நிச்சயம் உணர முடியும்.

மகா மண்டபத்தின் இடதுபுறம் இறைவி மீனாட்சி அம்மனின் சன்னிதி உள்ளது. முன் கை அபய முத்திரை காட்ட, மறு கையில் மலர் கொண்டு, கால்கட்டை விரல்களில் மெட்டி அணிந்து நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள் அன்னை மீனாட்சி.

மகா மண்டபத்தில் இருந்து இறைவனையும், இறைவியையும் நாம் ஒரு சேர தரிசிக்கலாம்.

ஆலயத்தின் தல வரலாறு என்ன?

பொன்னாலாகிய மூன்று வில்வ தளங்களை உடைய பொன் வில்வ சாரம் எந்த தேவலோகத் திலும் கிடைக்காத அருமை பெருமைகளை உடையது. எந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று ஓதி ஒரு முறை அர்ச்சித்து வழிபட்டால் உடனே அது பன்மடங்காகப் பெருகி பிரகாசித்து நிறைந்த செல்வத்தைத் தரும் அற்புதம் உடையது.

யோக தவ ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர் களைத் தவிர, இந்த பொன்வில்வ சாரம் எவர் கண்களுக்கும் தென்படாது. எவர் கரங்களிலும் நிலைத்து நிற்காது. இவ்வளவு மகிமையுடைய பொன் வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபன் இரு வரிடமும் அளித்து, பூலோகம் எங்கும் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளிடம் வைத்து வழிபட்டு இதன் மகிமையை அறிந்து வரும்படி கட்டளையிட்டார்.

சுயம்பு லிங்க பூஜையில் சிறப்பு பெற்றவர்கள் குபேரனின் குமாரர்கள். சிறந்த சிவ சேவகர்கள். எனவே அவர்கள் கண்களில் பொன் வில்வ சாரம் பட்டது. கரங்களில் நிலைத்து நின்றது. இதைக் கண்ட குபேரனுக்கு ஏக மகிழ்ச்சி.

மணிக்ரீவன், நளகூபன் இருவரும் புறப்பட்டனர். பொன்வில்வ சாரம் எந்த சிவாலயத்தில் பல மடங்கு ஒளி வீசும் என்ற தேவ ரகசியத்தை அறிய வேண்டுமே.

பூலோகமெங்கும் உள்ள சிவாலயங்களில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளின் மீது வைத்து குபேரனின் குமாரர்கள் வழிபட்டனர். இந்த பொன்வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வ தளம் போல் காட்சி தர, சில இடங்களில் மறைந்தும் காணப்பட்டது.

பல நூறு ஆண்டுகள் தல யாத்திரை மேற்கொண்ட அவர்கள், பலநூறு சுயம்பு லிங்க மூர்த்திகளை தரிசித்தனர். பின்னர், பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பவுர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன்வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து ‘ஓம் நமசிவாய’ என்று ஓதினர். இதன் மகிமையையும் தெய்வீக ரகசியத்தையும் தங்களுக்கு உணர்த்துமாறு வேண்டி நின்றனர்.

அண்ணாமலையாரிடம் வில்வதளம் சொர்ணமாகப் பிரகாசித்தது. சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாய் வழி காட்டினார். குமாரர்கள் இருவரும் தென் திசை நோக்கி பயணமானார்கள். சோழ நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். திருத்தவத்துறை எனப் பெயர் கொண்ட தற்போதைய லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடினர்.

நீராடி எழுந்த அவர்கள் தாங்கள் வேறொரு ஆலயத்தில் இருப்பதை உணர்ந்தனர். தங்கள் கரத்திலிருந்த பொன்வில்வசாரம் மறைந்து போனது கண்டு பதறினர். எழுந்து அந்த ஆலயத்தின் கருவறை நோக்கிச் சென்றனர்.

அங்கே அவர்கள் ஓர் அதிசயத்தைக் கண்டனர். கரும்பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலிக்கும் சுயம்பு லிங்கத் திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன் வில்வசாரம் பொங்கிப் பொங்கி பன் மடங்காகப் பெருகி ஒளிவீசக் கண்டனர். இருவரும் மெய் சிலிர்த்து ‘ஓம் நமசிவாய’ என ஓதி அர்ச்சிக்க அது மேலும் மேலும் பொங்கி பன்மடங்கு ஒளி வீசத் தொடங்கியது. புதல்வர்கள் இருவரும் மனம் நிறைந்து மனம் நிறைய பூரிப்போடு தேவலோகம் சென்றனர்.

தன் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும், தேவரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். தனக்கு கிட்டாத பாக்கியம் தன் புதல்வர்களுக்கு கிடைத்ததை எண்ணி மெய்சிலிர்த்தார். சோழநாட்டில் உள்ள சென்னி வள நாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார். பவுர்ணமி அன்று இந்த ஆலயம் வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வந்து வழிபடும் பக்தர்கள், சகல நன்மைகளையும், பொருட்களையும் பெற குபேரன் அருள்பாலிக்கிறார்.

கருவறை தேவக் கோட்டத்தில் துர்க்கா தேவியும், தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் மேற்கில் பெருமாள் ஆலயம் உள்ளது. லட்சுமி நாராயணப் பெருமாள் ஒரு சன்னிதியிலும், வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி- பூதேவியுடன் இன்னொரு சன்னிதியிலும் அருள்பாலிக்கின்றனர். அடுத்து முருகன் வள்ளி-தெய்வானையுடன் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். தைப் பூசத்தன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

வடக்கு பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர். ஒருவர் கடாசனத்திலும், மற்றவர் அர்த்த பத்மாசனத்திலும் தெற்கு மேற்காக வீற்றிருக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக் கிரக சன்னிதியும், மேற்கில் செவி சாய்த்த விநாயகர் சன்னிதியும் உள்ளன. ஆலயத்தின் தல விருட்சம் பொன் வில்வ மரம். இதன் இதழ்கள் மூன்று பிரிவுகளைக் கொண்டதாக அதிசயமாக காட்சி தருகிறது. வடக்கு பிரகாரத்தில் உள்ளது இந்த தல விருட்சம்.

பவுர்ணமி அன்று தலவிருட்சமான பென்வில்வ மரத்திற்கு, அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் சாத்தி, அடிப்பிரதட்சனம் செய்து இறைவன், இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம்.

சிவபெருமானுக்கு சிவகாம முறைப்படியும், லட்சுமி நாராயணருக்கு வைகானஸ ஆகம முறைப்படியும் தினசரி இங்கு இருகால பூஜைகள் நடைபெறுகின்றன. ஏகாதசி, பிரதோஷம், ஆடி, தை வெள்ளி, வைகுண்ட ஏகாதசி, மகாசிவராத்திரி போன்ற உற்சவங்கள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும். 

சென்னிவாய்க்கால் கோவில்

பிரம்மாவுக்கு ஐந்து முகங்கள் இருந்தபோது, இங்கு வந்து தனது ஐந்து முகங்களால் சிவனை வழிபட்டார். சிவபெருமான் தன்னுடைய ஐந்து முகங்களான சத்யோஜாதம், அகோரம், வாமனம், ஈசானம், தத்புருஷம் ஆகியவற்றுடன் பிரம்மாவுக்கு காட்சி தந்து அவரை மோட்சம் பெறச் செய்தார். ஐந்து முகங் களுடைய சிவனை, பிரம்மா தன் ஐந்து தலைகளால் (சென்னி) வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தல இறைவன் ‘சென்னி சிவம்’ என்று அழைக்கப்பட்டார். இந்தப் பகுதியும் ‘சென்னி வளநாடு’ என அழைக்கப்பட்டு, தற்போது ‘சென்னிவாய்க்கால் கோவில்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. 

அமைவிடம்

திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள நன்னிமங்கலம் என்ற கிராமத்தில் இருக்கிறது, இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 80A என்ற நகரப்பேருந்து லால்குடி வழியாக ஆனந்தி மேடு செல்லும். இந்த பேருந்தில் ஏறி சென்னிவாய்க்கால் சிவன் கோவில் என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அருகேயே உள்ளது ஆலயம். லால்குடியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயம் செல்ல ஆட்டோ வசதியும் உண்டு. 

Next Story