பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் மழை வேண்டி வருண பூஜை


பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் மழை வேண்டி வருண பூஜை
x
தினத்தந்தி 8 May 2019 11:30 PM GMT (Updated: 8 May 2019 9:25 PM GMT)

தமிழகத்தில் தற்போது கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் கடும் வெயில் நிலவி வருவதால் வன உயிரினங்களும் வனத்தை விட்டு ஊருக்குள் புகுந்து வருகின்றன.

பழனி,

தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் மழை வேண்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வருண பூஜை நேற்று நடந்தது. முன்னதாக கோவிலில் உள்ள சிவன், பெரியநாயகி அம்மன், முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோவிலில் உள்ள நந்தி சிலைக்கும், சிவனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னர் கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அதில் கோவில் அர்ச்சகர்கள் இறங்கி மந்திரங்களை ஓதி பூஜை செய்தனர். முன்னதாக கலசம் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வருண பூஜையை தொடர்ந்து யாகம் நடத்தப்பட்டது. இந்த பூஜை மதியம் 12 மணி வரை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனர்.

Next Story