தீராத நோய்களை தீர்க்கும் ‘வைத்திய நரசிம்மர்’
![தீராத நோய்களை தீர்க்கும் ‘வைத்திய நரசிம்மர்’ தீராத நோய்களை தீர்க்கும் ‘வைத்திய நரசிம்மர்’](https://img.dailythanthi.com/Articles/2022/Jan/202201111234410911_Vaidya-Narasimhar-cures-chronic-diseases_SECVPF.gif)
தெலுங்கானா மாநிலம் யாதகிரி மாவட்டத்தில், யாதகிரிகுட்டா என்ற ஊரில் அமைந்துள்ளது, லட்சுமி நரசிம்மர் ஆலயம்.
* இந்தக் கோவில் விமானத்தில், தங்கத்தால் ஆன சுதர்சன சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. 3 அடி உயரம், 3 அடி நீளம் கொண்ட இந்த சக்கரத்தின் ஜொலிப்பை, 6 கிலோமீட்டர் தொலைவு வரை பார்க்க முடியும்.
![]( https://img.dailythanthi.com/InlineImage/202201111234410911_Anmigam22 11 Jan 02._L_styvpf.gif)
* இங்கு வீற்றிருக்கும் மூலவரான லட்சுமி நரசிம்மர், மிகவும் சக்தி வாய்ந்தவர். இவர் 12 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட குகையில் இருந்து அருள்புரிகிறார்.
* தெலுங்கு பல்குண (பிப்ரவரி-மார்ச்) மாதத்தில், 11 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவம் இங்கு மிகவும் பிரசித்தமானது.
* தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 52 கிலோமீட்டரிலும், வாரங்கல்லில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும், போன்கிர் ரெயில் நிலையத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் யாதகிரிகுட்டா அமைந்துள்ளது.
* தீராத நோயைத் தீர்த்து வைக்கும் சக்திமிக்கவராக விளங்கும் இத்தல நரசிம்மர், ‘வைத்திய நரசிம்மர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
* ‘யோக நரசிம்மர், நரசிம்மர், ஜூவால நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர்’ என ஐந்து தோற்றங்களில் யாத ரிஷி முனிவருக்கு, காட்சி தந்த தலம் என்பதால், இந்தக் கோவில் ‘பஞ்ச நரசிம்மர் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
* பதினெட்டு புராணங்களில் ஒன்றான கந்த புராணத்தில், இந்தக் கோவிலைப் பற்றிய தகவல்கள் இருப்பதை வைத்து, இது எவ்வளவு புராதனமான ஆலயம் என்பதை உணர முடியும்.
தல வரலாறு
திரேதா யுகத்தில் வாழ்ந்த யாத ரிஷி என்ற முனிவர், அனுமனின் அருள்பெற்று நரசிம்மரை நினைத்து தவம் செய்தார். அவருக்கு நரசிம்மர் ஐந்து வடிவில் காட்சி தந்த தலம் இது. இந்த இடம் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மக்களின் முறையற்ற வழிபாட்டின் காரணமாக, நரசிம்மர் தன்னுடைய புராதன இடத்தில் இருந்து தற்போதைய குன்றில் வந்து அமர்ந்ததாகவும், அதை அறிந்து இங்கே ஆலயம் கட்டப்பட்டதாகவும் தலவரலாறு சொல்கிறது.
விரிவாக்கப் பணி
![]( https://img.dailythanthi.com/InlineImage/202201111234410911_Anmigam22 11 Jan 01._L_styvpf.gif)
* தெலுங்கானா அரசு சார்பில், இந்த ஆலயத்தை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இணையாக பிரமாண்டமாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
* 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி, முடியும் தருவாயில் உள்ளது. இதற்காக அரசு ஒதுக்கியுள்ள நிதி ரூ.1,800 கோடி ஆகும்.
* இந்த ஆலய விரிவாக்கத்திற்காக கோவிலைச் சுற்றியுள்ள, 1,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 14 ஏக்கரில் ஆலயம் அமைக்கப்படுகிறது.
* காக்கத்தியர்களின் கட்டிடப் பாணியில் கட்டப்படும் இந்த ஆலயம், கருப்பு கிரானைட் கற்களை மட்டும் கொண்டு கட்டப்படுகிறது.
* ஆலயம் மொத்தம் 7 கோபுரங்களுடன் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. கோவிலில் 12 ஆழ்வார்களை குறிக்கும் வகையில் 12 மிகப்பெரிய தூண்கள் அமைக்கப்படுகின்றன.
Related Tags :
Next Story