பூண்டி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பூண்டி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்காட்டுப்பள்ளி;
பூண்டி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பூண்டி மாதா பேராலயம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் பூண்டி மாதா பேராலயமும் ஒன்று. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூண்டி மாதா பிறப்பு பெருவிழா தொடக்கத்தையொட்டி வண்ண விளக்குகளால் பேராலயம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட கொடியை பேராலய முன்புறத்தில் இருந்து பக்தர்கள் பிடித்து சென்றனர். அப்போது பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட சிறிய தேரை பக்தர்கள் சுமந்து வந்தனர்.
கொடியேற்றம்
விழாவில் கலந்து கொண்டவர்கள் பூண்டி அன்னையின் புகழ் பாடும் பாடல்கள் பாட கொடி ஊர்வலம் கொடி மரத்தை அடைந்தது. பின்னர் மாதாவின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக பூண்டி அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து ஏற்றி வைத்தார். கொடியேற்றியபோது அதிர்வேட்டுகள் முழங்க பக்தர்கள் 'மரியே வாழ்க' என்று விண்ணதிர வாழ்த்து ஒலி எழுப்பினர்.தொடர்ந்து பூண்டி மாதா பேராலயத்தின் எதிரில் உள்ள அரங்கில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலிக்கு கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமை தாங்கினாா். திருப்பலியில் பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், மறைவட்ட முதன்மைகுரு இன்னசென்ட், உதவி பங்கு தந்தையர் அன்புராஜ், தாமஸ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், ஜோசப் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் பேராலய வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.
தேர்பவனி
விழா நாட்களில் தொடர்ந்து தினமும் மாலை கொடி ஊர்வலம், சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது. மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி(வியாழக்கிழமை) மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடக்கிறது. மறுநாள்(9-ந் தேதி)காலை திருவிழா திருப்பலி கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடக்கிறது.கொடியேற்று விழாவையொட்டி திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.