கலைகளில் சாதிக்க வைக்கும் காமத்தூர் சந்திரசேகரர்


கலைகளில் சாதிக்க வைக்கும் காமத்தூர் சந்திரசேகரர்
x

காமத்தூர் சந்திரசேகரசுவாமி திருக்கோவில்

தினத்தந்தி 16 Jun 2023 6:45 AM GMT (Updated: 16 Jun 2023 6:48 AM GMT)

சந்திரன் சாபம் தீர்த்த தலம், ஆதிசங்கரரால் ஶ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, காமக்கூர் என்ற காமத்தூர் சந்திரசேகரசுவாமி திருக்கோவில்.

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது, அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று, சந்திரன் சாபம் தீர்த்த தலம், ஆதிசங்கரரால் ஶ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள காமக்கூர் என்ற காமத்தூர் சந்திரசேகரசுவாமி திருக்கோவில்.

இந்தக் கோவில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கு அருகிலுள்ள காமக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும். மூலவர் இளம்பிறைநாதர், பிறைசூடிய பெருமான், சந்திரசேகர சுவாமி என்ற பெயர்களாலும், அம்பாள் அமிர்தாம்பிகை என்ற திருநாமத்துடனும் அழைக்கப்படுகிறார்கள். அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இக்கோவிலின் முருகப்பெருமானைப் பற்றிப் பாடியுள்ளார். இக்கோவில் தேவார வைப்புத் தலமாகவும் கருதப்படுகிறது. இவ்வாலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. ஆதிசங்கரரால் ஸ்ரீசக்கர யந்திரம் இங்கே ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது என்பதில் இருந்து இக்கோவிலின் பழமையை உணர முடியும்.

ஒரு முறை இந்தக் கோவிலின் வழியாக ஒருவர், தன் குடும்ப உறுப்பினர் அஸ்தி கலசத்துடன் காசிக்கு பயணமாகச் சென்றார். அப்போது கலசத்தில் இருந்த எலும்பு துண்டுகள் அரளி மலர்களாக மாறியது. எனவே இந்த ஆலயம் காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுகிறது. காசியில் செய்யும் தர்ப்பணக் காரியங்களை இங்கும் செய்யலாம் என்கிறார்கள்.

ஒரு முறை ஜெயம் கொண்ட சோழனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். கனவில் அவர் கூறியபடிதான், மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டித் திருப்பணிகள் செய்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாலய இறைவனை, முருகப்பெருமான், சந்திரன், அர்ச்சுனன், மன்மதன், ரதி, தசரதன், விவஸ்வன் என்ற மன்னன், காமகோடி என்ற பெண்மணி ஆகியோர் வழிபட்டு, தங்களின் பாவங்கள் நீங்கப் பெற்றுள்ளனர்.

தட்சனின் சாபத்தில் இருந்து விடுபட சந்திரன் வழிபட்ட தலம் இந்த காமக்கூர் சிவன் கோவில். இந்தத் தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்ததால், 'சந்திரசேகரர்' என்ற திருநாமம் இவருக்கு வந்தது. பழங்காலத்தில் காமநகர் என்றும், காமத்தூர் என்றும் அழைக்கப்பட்ட இந்த இடம், பின்னர் காமக்கூர் என மாறியது. காமாட்சி அம்மை சன்னிதி உள்ளது. எனவே பழங்காலத்தில் 'காமத்தூர்' என்று பெயர் பெற்றது.

கோவில் அமைப்பு:

இக்கோவிலில் 4 நிலை ராஜகோபுரம் உள்ளது. துவஜஸ்தம்பம், நந்தி மற்றும் விநாயகர் சன்னிதி நுழைவு வாசலுக்குப் பிறகு உடனடியாகக் காணலாம். அடுத்ததாக கருவறையில் மூலவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தனிச் சன்னிதியில் அன்னை அமிர்தாம்பிகை அருளாசி தருகிறார். அவர் நின்ற தோரணையில் இருக்கிறார். கோவில் வளாகத்தில் முருகன் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி இருக்கிறார். அவருக்கு ஆறு முகங்களும், 12 கைகளும் உள்ளன. தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவிலிலும் இதேபோன்ற முருகன் சிலை உள்ளது. திருப்புகழ் பாடல்களில் இந்த முருகப்பெருமான் போற்றப்பட்டுள்ளார்.


கோவில் வளாகத்தில் காமாட்சி தேவி சன்னிதி உள்ளது. இவளை 'திரிபுரசுந்தரி' என்றும் அழைப்பர். ஒரு கையில் பூவும், மறு கையில் கரும்பும் ஏந்தியபடி இருக்கிறாள். ஆதிசங்கரர், இந்த அன்னையின் சன்னிதியில் ஸ்ரீ சக்கரத்தை நிறுவி இருக்கிறார். இந்த அன்னை சன்னிதியின் துவாரபாலாகியின் சிலைகளில், பல இடங்களில் தட்டும்போது பல்வேறு இசைக் குறிப்புகள் வெளிப்படுகின்றன. இந்த அன்னையின் சன்னிதிக்கு எதிரே, பச்சைக் கல்லால் ஆன யாழியைக் காணலாம்.

கோவில் வளாகத்தில் நடராஜர் சன்னிதி உள்ளது. இங்கு நடராஜப் பெருமானின் தோற்றம் மற்ற இடங்களில் இருந்து வேறுபட்டது. இங்கே அவரது இடது கால் தரையில் உள்ளது. வலது கால், இடது காலுக்கு பின்புறம் மடங்கிய வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான நடன முத்திரை 'சதுர தாண்டவம்' என்று அறியப்படுகிறது. நடராஜருக்கு அருகில் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கிறார். கோவில் வளாகத்தில் சகஸ்ர லிங்கமும் உள்ளது. இக்கோவிலில் 5 தீர்த்தங்கள் உள்ளன. தினமும் இரண்டு முறை மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.

சிவாலய காவலரான பைரவர் கம்பீரமாக நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். உலகின் இயக்கத்தைச் சமநிலைப்படுத்தும் நவக்கிரக நாயகர்களின் சன்னிதியும் இங்கே அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார் சிவபிரான். தட்சனின் சாபத்தால் கலைகளை இழந்து வருந்திய சந்திரனுக்கு சாப நீக்கம் தந்தவர் இவர்தான்.

சந்திரனின் கலைகளில் ஒன்றை தன் சிரத்தில் ஏற்று, சந்திரசேகரராகத் திருநாமம் கொண்டார் இந்த மூலவர். சோமவாரம் தான் சிவ வழிபாட்டுக்கு சிறந்த நாள். சோமன் (சந்திரன்) வழிபட்டுப் பலனடைந்ததன் காரணமாக, திங்கட்கிழமைகளில் சந்திரசேகரைத் தரிசித்து வழிபடுவது பெரும் பலன் அளிக்கும். சந்திரன் ராசிநாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் இந்த பெருமானைத் தரிசித்து வழிபட்டால் தடைகள் விலகப் பெறுவார்கள். ஜாதக ரீதியாகச் சந்திரன் நீச்சம் அடைந்தவர்கள் இங்கு வழிபட்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும்.

இசை, ஓவியம், நடனம், கவிதை உள்ளிட்ட கலைகளில் சிறப்படைய விரும்புபவர்கள் திங்கட்கிழமை தினங்களில் இங்கு வந்து வெண்ணிற மலர்களால் மாலை சாத்தி வழிபடுவது மேன்மை தரும். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே காமக்கூரில் கோவில் கொண்டிருக்கும் இந்த சந்திரசேகரர் பெருமானை, ஒருமித்த சிந்தனையுடன் கைகுவித்து தொழுதால் விருப்பம் அனைத்தும் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் யெ்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

ஆரணியிலிருந்து 8 கிலோமீட்டர் தெலைவில் உள்ளது, காமக்கூர் திருத்தலம். ஆரணியில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் இங்கு செல்ல இருக்கின்றன.

பாலாஜி கணேஷ், சிதம்பரம்.


Next Story