மார்கழி மாதப்பிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


மார்கழி மாதப்பிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 17 Dec 2023 2:16 AM GMT (Updated: 17 Dec 2023 2:30 AM GMT)

திருமணமாகாத பெண்கள் மார்கழி மாதம் நோன்பு இருந்து ஆண்டாளை வழிபட்டால் மணவாழ்க்கை விரைவில் அமையும் என்பது ஐதீகம்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

பூமாதேவியான ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவர். ஆண்டாள் சிறு வயதிலேயே கண்ணன் மீது காதல் கொண்டு கண்ணனையே தனது கணவனாக அடைய இறைவனை வேண்டி நோன்பு இருந்துள்ளார். மார்கழி மாதம் 30 நாட்களும் விரதம் இருந்து திருப்பாவை பாடி கண்ணனை தன் மணவாளனாக அடைந்தார்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்கழி மாதத்தில் ஆண்டாள் கோவிலில் நடக்கும் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. திருமணமாகாத பெண்கள் மார்கழி மாதம் நோன்பு இருந்து ஆண்டாளை வழிபட்டால் மணவாழ்க்கை விரைவில் அமையும் என்பது ஐதீகம்.

இந்தாண்டு மார்கழி மாத திருவிழாவையொட்டி, கடந்த 13-ந்தேதி மார்கழி பகல் பத்து உற்சவம் தொடங்கியது. வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் பகல் பத்து திருவிழா நடைபெறுகிறது. வருகிற 23-ந் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிலையில், தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதம் பிறப்பையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story