திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்
x
தினத்தந்தி 23 Feb 2024 2:30 AM GMT (Updated: 23 Feb 2024 10:32 AM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர்,

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

8-ம் திருநாளான நேற்று முன்தினம் அதிகாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

9-ம் திருநாளான நேற்று காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்க பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தியபின் 8 வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவில் சென்றனர். இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று காலையில் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விசுவரூப தீபாரானையும், 6 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் காலை 6.30 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு ரதவீதி நான்கிலும் பவனி வந்து 7.15 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேர் 7.20 மணிக்கு புறப்பட்டது.

இந்த பெரிய தேரை மாலைமுரசு நாளில் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், அவர் தம்பி கதிரேச ஆதித்தன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் 'அரோகரா' கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் ரதவீதி நான்கிலும் பவனி வந்து மீண்டும் 9.05 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது.

தொடர்ந்து தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் 9.15 மணிக்கு புறப்பட்டு ரதவீதிகளில் பவனி வந்து மீண்டும் 10.15 மணிக்கு நிலையை வந்து சேர்ந்தது.

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

11-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 12-ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வருகிறார்கள். இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள்.


Next Story