போகர் பிரதிஷ்டை செய்த பூம்பாறை முருகன்


போகர் பிரதிஷ்டை செய்த பூம்பாறை முருகன்
x

இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன், வெங்கலம், கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன.

அவை:

1. பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை.

2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.

கொடைக்கானலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும் என்கிறார்கள்.

உலகிலேயே நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் போகர் என்ற மாமுனிவராவார். இவர் உருவாக்கியது பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் நினைக்கின்றனர்.

ஆனால் பூம்பாறை முருகன் சிலையையும் அவர்தான் நவபாஷானத்தால் உருவாக்கியவர் என்பது பலரும் அறியாத தெரியாத செய்தியும் கூட. அதுபோல் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் இவர் என்பது அந்த கோவிலுக்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.

பாண்டவர் வனவாசம் மேற்கொண்ட போது இறுதியாக வந்த வனம் பழனி கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையாகும்.

பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையில் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையைத் தான் பழனி மலையில் பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர்.

அக்கோவிலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபங்களை கட்டச் செய்தார் என்பது வரலாறு.

பின்னர் மறுபடியும் சீீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும், ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் நவபாஷான சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையை, இங்குள்ள திருமண மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்தார். அருணகிரி நாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் படுத்து தூங்கிவிட்டார்.

அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரி நாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக்கண்டு குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டாள்.

தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை அறிந்த அருணகிரி நாதர் இத்தல முருகனை `குழந்தை வேலர்' என்று அழைத்தார். அந்த பெயரே இத்தல முருகனுக்கு நிலைத்து போனது.

முருகப்பெருமானின் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலை உள்ளது. இங்கு வந்து வழிபடுபவர்களின் பாவ வினைகள் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.


Next Story