வரலட்சுமி நோன்பையொட்டி நெல்லையப்பர் கோவிலில் சுமங்கலி பூஜை


வரலட்சுமி நோன்பையொட்டி  நெல்லையப்பர் கோவிலில் சுமங்கலி பூஜை
x

வரலட்சுமி நோன்பையொட்டி நெல்லையப்பர் கோவிலில் நேற்று சுமங்கலி பூஜை நடைபெற்றது

திருநெல்வேலி

வரலட்சுமி நோன்பையொட்டி நெல்லையப்பர் கோவிலில் நேற்று சுமங்கலி பூஜை நடைபெற்றது.

வரலட்சுமி நோன்பு

ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் வரலட்சுமி நோன்பை கடைபிடிக்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான வரலட்சுமி நோன்பு நேற்றைய தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் இந்து ஆலய பாதுகாப்பு குழு மற்றும் இளைய பாரதம் அமைப்பு சார்பில் 1,008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு பூஜை

நெல்லையப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

இதனைத் தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னர் பெண்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த கலசத்திற்கு சிறப்பு பூஜைகளும், அதனை தொடர்ந்து சுமங்கலி பூஜை வழிபாடும் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு புதிய மஞ்சள் கயிறு அணிவித்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் உடன் வழிபாடு நடத்தினர்.

வீதி உலா

நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோவிலில் நேற்று மாலை 4 மணி அளவில் சுந்தரமூர்த்தி நாயன்மார் யானை வாகனத்திலும், சேரமான் பெருமாள் குதிரை வாகனத்திலும் மற்றும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story