பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சீர்காழி படித்துறை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்காவடி, அலகு காவடி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் கரகம் புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு, சிதம்பரம் ரோடு வழியாக கோவிலை அடைந்தனர். மதியம் அம்பாளுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியப்பொடி, பழங்கள், மலர்கள் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. தொடா்ந்து அம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா். இரவு பச்சைக்காளி, பவளக்காளி வேடமணிந்து தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) மஞ்சள் விளையாட்டு விழாவும், நாளை( ஞாயிற்றுக்கிழமை) விடையாற்றி உற்சவமும், 24-ந் தேதி(திங்கட்கிழமை) ஊஞ்சல் விழாவும் நடக்கிறது.


Next Story