திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

வீடுகள் தோறும் வாழைமரங்கள், இளநீர் குலைகளை கட்டி அலங்காரம் செய்து மேலஉத்தமநல்லூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை,

வீடுகள் தோறும் வாழைமரங்கள், இளநீர் குலைகளை கட்டி அலங்காரம் செய்து மேலஉத்தமநல்லூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

திரவுபதி அம்மன் கோவில்

அய்யம்பேட்டை அருகே காவிரி ஆற்றங்கரையில் மேல உத்தம நல்லூர் கிராமம் உள்ளது. இங்கு பழமையான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவுக்காக இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு விழா பத்திரிகையை நேரில் சென்று கொடுத்து அழைப்பது வழக்கம்.விழாவை முன்னிட்டு இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்து வர்ணம் பூசுவாா்கள். பின்னர் வீடுகள் தோறும் கீற்று கொட்டகைகள் அமைத்து வரிசையாக வாழை மரங்கள், தோரணங்கள், இளநீர், நொங்கு, பலா பழங்களை கட்டி அழகுபடுத்துவார்கள்.

தீமிதி திருவிழா

இந்நிலையில் நேற்று முன் தினம் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. இரவு மகாபாரத கதை சொற்பொழிவு நடைபெற்றது. விழா நாளில் காலை பால் குடமும், கூந்தல் முடிதல் நாடகமும் நடைபெற்றது. மாலை விநாயகர், பஞ்ச பாண்டவர்கள் வேடம் அணிந்தவர்கள் டிராக்டரில் அணிவகுக்க, கிருஷ்ணன் வேடம் அணிந்தவர் தேரோட்டியாக டிராக்டரை ஒட்டி சென்றார். அதற்கு முன்பு கர்ணன் வேடம் அணிந்தவர் யானை மீது அமர்ந்து சில்லறை காசுகளை பக்தர்கள் கூட்டத்தின் இடையே வீசி செல்ல அதை பக்தர்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.இதையடுத்து திரவுபதி அம்மன் பரிவார தெய்வங்களுடன் அக்னி குண்டம் நோக்கி புறப்பட்டது. ஊரின் எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story