தென்காசி காசி விசுவநாதர் கோவில் தேரோட்டம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்


தென்காசி காசி விசுவநாதர் கோவில் தேரோட்டம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
x
தினத்தந்தி 23 Feb 2024 11:10 AM GMT (Updated: 23 Feb 2024 11:12 AM GMT)

காசி விசுவநாத சுவாமி எழுந்தருளிய தேர் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 10-30 மணிக்கு நிலையை அடைந்தது.

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 15-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் அபிஷேக தீபாராதனையும் இரவில் கட்டளை தீபாராதனை மற்றும் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 9-ம் திருநாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

வழக்கமாக இந்த விழாவில் இரண்டு தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படும். ஒரு தேருக்கு திருப்பணி நடைபெற்று வருவதால் ஒரு தேர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. காலை 5-40 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. தொடர்ந்து 9-35 மணிக்கு காசி விசுவநாத சுவாமியை தேரில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடிக்க தேர் புறப்பட்டது. பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க, பஞ்ச வாத்தியங்கள், மேளதாளங்கள் இசைக்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 10-30 மணிக்கு நிலையை அடைந்தது.

இதன் பின்னர் 10-45 மணிக்கு அதே தேரில் உலகம்மனை எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 11-45 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் தென்காசி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.


Next Story