வீர நர்த்தன மகா காளியம்மன் கோவில் குடமுழுக்கு

வீர நர்த்தன மகா காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருக்கடையூர் ஊராட்சி, பெருமாள் கோவில் தெருவில் வீர நர்த்தன மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடந்து முடிந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 25 -ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. அதனைத்தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கணேச குருக்கள், மகேஷ் குருக்கள் ஆகியோர் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெருமாள் கோவில் தெருமக்கள் செய்திருந்தனர். இதில், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் பொறையாறு போலீசார் ஈடுபட்டனர்.
்






