வருமான வரி குறைப்பு – நல்ல முடிவு


வருமான வரி குறைப்பு – நல்ல முடிவு
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 10 Dec 2019 3:05 PM GMT)

பொதுவாக எல்லோருக்கும் ஒரு குறை இருக்கிறது. வருமானத்தின் பெரும்பகுதியை வரியாக கட்டிவிட்டால், எப்படி பொருட்கள் வாங்க முடியும், முதலீடு செய்யமுடியும்? என்ற குறை இருக்கிறது.

அன்றாடம் உழைக்கும் தொழிலாளர்கள் என்றாலும் சரி, வீடுகளில் குடும்பத்தை நிர்வகிக்க பணத்தை செலவழிக்கும் இல்லத்தரசிகள் என்றாலும் சரி, சிறு–குறு, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் என்றாலும் சரி, தெருவோரம் நடைபாதை கடை வைத்திருக்கும் வியாபாரிகளில் இருந்து பெரிய வர்த்தக நிறுவனங்கள் வைத்திருக்கும் வியாபாரிகள் என்றாலும் சரி, எல்லோருமே நிதி மந்திரியைப்போல, தங்கள் வரவையும்– செலவையும் மதிப்பிட்டு பட்ஜெட் தயாரித்துத்தான் செலவுகளை மேற்கொள்கிறார்கள். அந்த வகையில், எல்லோரிடமும் பணப்புழக்கம் இருந்தால்தான் தொழில் தழைக்கும், வர்த்தகம் வளரும். பொதுவாக எல்லோருக்கும் ஒரு குறை இருக்கிறது. வருமானத்தின் பெரும்பகுதியை வரியாக கட்டிவிட்டால், எப்படி பொருட்கள் வாங்க முடியும், முதலீடு செய்யமுடியும்? என்ற குறை இருக்கிறது. அந்தவகையில், நிதி மந்திரியாக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றபிறகு கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெகுகாலமாக தொழில் நிறுவனங்கள் எழுப்பிக்கொண்டிருந்த கோரிக்கையை ஏற்று, நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து 

22 சதவீதமாக குறைத்தார். புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 25 சதவீத வரியிலிருந்து 15 சதவீதமாக குறைத்தார். கூடுதல் வரி, மேல் வரியை சேர்த்து, பெரிய நிறுவனங்களின் வரி 35 சதவீதத்திலிருந்து 25.17 சதவீதமாக இப்போது குறைக்கப்பட்டுள்ளது. 

இதுபோல, புதிய நிறுவனங்களுக்கும் மேல் வரி, கூடுதல் வரியை சேர்த்து 17.01 சதவீதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு நிச்சயமாக தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பலனை அளிக்கும். இந்த வரி குறைப்பால் தொழில் வளர்ச்சி எவ்வளவு உயர்ந் துள்ளது என்பது அடுத்த சில மாதங்களில் தெளிவாக தெரிந்துவிடும். ஆனால், இந்த வரி குறைப்பு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர்களின் வரவேற்பையும் பெருமளவில் பெற்றுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு வரியை குறைத்து, அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியை அளித்து விட்டீர்கள். நடுத்தர மக்கள் தொடங்கி மேல்தட்டு மக்கள் வரை வருமானத்தில் ஒரு கணிசமான பகுதியை வருமான வரியாக கட்டு கிறோமே, எங்களுக்கு வருமானவரியை குறைத்தால் எங்கள் வாழ்விலும் வசந்தம் ஏற்படுமே, சற்று கையில் பணப்புழக்கம் இருந்தால் எங்களால் நினைத்த செலவு களை மேற்கொள்ளமுடியுமே, விரும்பும் பொருட் களை வாங்கமுடியுமே என்ற ஒரு பெரிய ஏக்கம் கலந்த கோரிக்கை ஆண்டுதோறும் அரசுக்கு விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இப்போது கடந்த சனிக்கிழமை நிர்மலா சீதாராமன் ஒரு கூட்டத்தில் பேசும்போது, பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் ஒரு அம்சமாக தனிநபர் வருமானவரி சீர்திருத்தம் உள்பட பல்வேறு திட்டங்கள் எங்கள் பரிசீலனையில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவு நிறுவன வரியில் பெரிய குறைப்பை வழங்கிய நிர்மலா சீதாராமன், வருமான வரி குறைப்பும் பரிசீலனையில் இருக்கிறது என்று கூறியது, எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அந்த கூட்டத்தில், பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

ஆக, ஒரு சிறிதளவு பணம் பொதுமக்களிடம் மிச்சமாக இருந்தாலும், ஒன்று அதனால் பல பொருட்கள் வாங்க செலவழிப்பார்கள் அல்லது சேமிப்புகளில் முதலீடு செய்வார்கள். மக்களின் கையில் பணப்புழக்கம் இருந்தால் அது வர்த்தகம், தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும். அந்த வகையில், மத்திய நிதி மந்திரி, தனிநபர் வருமானவரியில் சலுகை களை அளித்தால் இன்னும் நிறையபேர் வருமானவரி என்பது கஷ்டப்படுத்தும் ஒன்றல்ல என்பதை புரிந்து வரி வளையத்துக்குள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.  

Next Story