கொரோனா நேரத்திலும் தொழில் வளர்ச்சி!


கொரோனா நேரத்திலும் தொழில் வளர்ச்சி!
x
தினத்தந்தி 21 July 2020 9:30 PM GMT (Updated: 21 July 2020 5:53 PM GMT)

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், தொழில்கள் எல்லாம் முடங்கி, வேலைவாய்ப்புகள் எல்லாம் பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டன.

எப்போது நிலைமை சீராகும்? வீழ்ந்து கிடக்கும் தொழில் எப்போது எழுந்து நிற்கும்? என்று எல்லோரும் ஏக்கப் பார்வையோடு புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், இருளில் தெரியும் வெளிச்சமாக, தமிழக அரசின் தொழில் துறை செயல்பாடுகள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு மிகத்தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் புதிய முதலீடுகளை ஈர்த்ததில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. 5 ஆண்டுகளில் இல்லாத அளவு புதிய முதலீடுகளில் ஒட்டுமொத்த இந்தியாவும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில், தொழில்துறை செயலாளர் முருகானந்தம், சிறப்பு செயலாளர் அருண் ராய் ஆகியோர் கொண்ட ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு மிகத்தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே, தொழில் தொடங்குவதற்கு அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் வழங்குவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்ட ஒற்றைச்சாளர முறை, தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டின் பக்கம் தங்கள் பார்வையை திருப்ப ஊக்குவித்துள்ளது.

கடந்த மே மாதம் 27-ந்தேதி தொழில்துறை சார்பில் ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன் ரூ.15,128 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 47,150 பேர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும். இந்த நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டில் அதிகரிக்க வழிவகுக்கும்.

நேற்று முன்தினம் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.10,399 கோடி முதலீட்டில் 8 தொழிற்சாலைகள் தொடங்கிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் மூலம் 13,507 பேர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில தொழிற்சாலைகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு ஓரிரு தினங்களில் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்தநிலையில், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23, 24-ந்தேதிகளில் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 81 ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்து வணிக உற்பத்தியை தொடங்கிய நிலையில், மேலும் 191 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவில் தொடங்குவதற்கான பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன என்ற சூழ்நிலையைப்போல, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தாலும், அவைகளை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டிய துரிதமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

கொரோனா பாதிப்பு முடிந்து தமிழகம் மீண்டு எழும் நேரத்திற்கு முன்பே, புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழாக்களும் அடுத்தடுத்து நடைபெற வேண்டும். தொழிற்சாலைகள் வரும் இந்த நேரத்தில், அதற்கு தேவையான மின்சார வசதி, உள்கட்டமைப்பு வசதி, போக்குவரத்து வசதி என்ற அனைத்து துணை வசதிகளையும் மேற்கொள்வதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு வேகமாக எடுக்க வேண்டும். இப்போது, பரவலாக சில மாவட்டங்களில் தொழில்கள் தொடங்கப்போவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோல, 37 மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான முனைப்பை தமிழக அரசும், தொழில்துறையும் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

Next Story