வருது.. வருது.. தடுப்பூசி வருது..!


வருது.. வருது.. தடுப்பூசி வருது..!
x
தினத்தந்தி 22 July 2020 10:00 PM GMT (Updated: 22 July 2020 6:19 PM GMT)

கொரோனா தொற்று, உலகம் முழுவதையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலும், ஜனவரி மாதம் கேரளாவிலும், மார்ச் மாதம் தமிழ்நாட்டிலும் காலூன்றிய கொடிய கொரோனா தொற்று, உலகம் முழுவதையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நாள் ஆகிவிட்டது, இன்னும் கொரோனா தொற்றின் வேகம் குறையவில்லை. ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே போகிறது. எப்போது குறைந்து கொரோனா தொற்று இல்லாத உலகம் மலரப்போகிறது? என்பதுதான், எல்லோருடைய பெரிய ஆசையாக இருக்கிறது. ஆனால், இந்தப் பரவலின் வேகத்தைப் பார்த்தால், தானாக ஒழியவும் போவதில்லை. ஏதாவது, தடுப்பூசி கண்டுபிடித்து எல்லோருக்கும் போட்ட பிறகுதான், புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். அதற்குப் பிறகுதான் விளக்கு தானாக மங்கி அணைவதுபோல, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாக.. குணமாக.. எண்ணிக்கை குறைந்து, கொரோனா தொற்று மறைந்துவிடும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்.

எனவே, தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஐதராபாத்தை சேர்ந்த “பாரத் பயோ டெக் நிறுவனம்“ இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலோடு இணைந்து தயாரித்த கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை 3 கட்டங்களாக மருத்துவப்பரிசோதனை செய்வதற்கான அனுமதி, 12 மருத்துவக்கல்லூரி சார்ந்த ஆராய்ச்சி நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று, சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமாகும். எய்ம்ஸ் மருத்துவமனை, எஸ்.ஆர்.எம். ஆராய்ச்சி மையங்கள் முதல்கட்ட பரிசோதனையை தொடங்கும் முயற்சியை ஆரம்பித்துவிட்டது.

ஆனால், இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த முயற்சியில் வேகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நல்ல காலம் பிறக்குது.. நல்ல காலம் பிறக்குது.. என்று குடுகுடுப்பைக்காரர் வீட்டின் முன்நின்று சொல்லும்போது எவ்வளவு மகிழ்ச்சி வருமோ, அதுபோல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தடுப்பூசி வருது.. தடுப்பூசி வருது.. என்று சொல்வது மிகுந்த பூரிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது மருந்தை கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முதல் 2 கட்ட சோதனைகளில் அந்த தடுப்பூசி நல்ல பலனை கொடுத்துள்ளது. இதை செலுத்தியவர்களுக்கு, உடலில் கொரோனா தொற்று எதிர்ப்புத்திறன் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியாளரான புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட், இங்கிலாந்து நாட்டு பிரபல மருந்துக் கம்பெனி அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தோடு 100 கோடி டோஸ் தடுப்பு மருந்தை இந்தியாவிலேயே மருத்துவப்பரிசோதனையை செய்த பிறகு உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 3வது நிலை மருத்துவப்பரிசோதனையை இந்தியா உள்பட பல நாடுகளில் 1,500 தன்னார்வ தொண்டர்களிடம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சோதனை வெற்றிபெற்று, இந்திய நிறுவனம் இந்த தடுப்பூசியை 100 கோடி டோஸ் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தும்போது, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி மருந்து மக்களுக்கு கிடைத்துவிடும். இந்த தடுப்பூசியின் விலை ஏறத்தாழ ரூ.1,000 க்கும் குறைவாக இருக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார்.

ஆக, எவ்வளவு முயற்சித்தாலும் தடுப்பூசி அறிமுகப்படுத்தும் பணிக்கு டிசம்பர் மாதம் ஆகிவிடும். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்க, அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கு சென்றுவிடும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. எனவே, அதுவரை கொரோனா பரவல் நிச்சயமாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ஒரே வழி முககவசம் அணிவது ஒரு கலாசாரமாக மாற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் இப்போது ஆலோசனை தெரிவித்த நிலையில், நாம் அன்றாடம் அணியும் ஆடையைப் போல முககவசமும் ஒரு ஆடை என்ற கலாசாரம் அடுத்த ஓராண்டுக்கு மக்களிடம் இருந்தால்தான் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.

Next Story