‘எம்-சாண்ட்’ தரம் கண்டறியும் பரிசோதனை


‘எம்-சாண்ட்’ தரம் கண்டறியும் பரிசோதனை
x
தினத்தந்தி 27 Jan 2018 6:15 AM GMT (Updated: 27 Jan 2018 6:15 AM GMT)

கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் எம்-சாண்ட் எந்த அளவுக்கு தரமாக உள்ளது என்பதை கண்டறியும் வழிமுறைகளை கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தற்போது நிலவி வரும் மணல் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக எம்-சாண்ட் பயன்பாட்டுக்கு வந்து, இப்போது பரவலாக உபயோகத்திலும் இருந்து வருகிறது. இந்தநிலையில் போதிய அளவு தரமில்லாத எம்-சாண்ட் புழக்கத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

ஆற்று மணலுக்கு மாற்று

நீண்ட காலம் உபயோகத்தில் இருந்து வரும் ஆற்று மணலுக்கு மாற்றாக விளங்கும் ‘எம்-சாண்ட்’ பல இடங்களில் போதிய அளவு தரத்துடன் கிடைப்பதில்லை என்பது வீடு கட்டும் பொதுமக்கள் மற்றும் கட்டுமான துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்-சாண்ட் வாங்கும்போது அதன் தரத்தை எவ்வாறு அறிந்துகொள்வது என்ற குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

குவாரி டஸ்ட் அளவு

எம்-சாண்ட் செயற்கை மணலில் 75 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான அளவு கொண்ட ‘குவாரி டஸ்ட்’ துகள் கலந்திருப்பது அதன் வலிமையை பாதிக்கக்கூடியதாகும். அதை பயன்படுத்தி பூச்சு வேலைகள் உள்ளிட்ட இதர வேலைகளை செய்யும் பட்சத்தில் வலுவற்ற கட்டமைப்பு உருவாகி விடலாம்.

பொதுவான சோதனை

ஆற்று மணலில் கலந்துள்ள களிமண் மற்றும் நுண்ணிய இதர துகள்களை கண்டறிய ஒரு சோதனை உள்ளது. கட்டுமான பணியிடத்தில் உள்ள மணலின் மையப்பகுதியிலிருந்து கொஞ்சம் மணலை எடுத்து, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் விட்டு கலக்கிவிட்டு ஓரிடத்தில் வைக்கப்படும். கொஞ்ச நேரம் கழித்து தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும் நுண்துகள் அல்லது பிசுபிசுப்பான களிமண் ஆகியவற்றின் தன்மைகளை கணக்கிட்டு ஆற்று மணலின் தரத்தை கண்டறிவது வழக்கம்.

நுண் பாறைத்துகள்

எம்-சாண்ட் என்பது பாறைகளை உடைத்து அவற்றை குறிப்பிட்ட அளவு நுண் துகளாக மாற்றப்படுவதால், மேற்கண்ட முறையில் தண்ணீரில் கலந்து பிரித்தெடுத்து அளவை சரி பார்த்துக்கொள்வது இயலாது. அவ்வாறு செய்து பார்த்தாலும் 150 மைக்ரான் அளவு கொண்ட துகள்கள்தான் தண்ணீரில் மிதக்கும்.

சல்லடை முறை

எம்-சாண்ட் செயற்கை மணலில் கலந்துள்ள குவாரி டஸ்ட் அளவு 15 சதவிகிதத்துக்கும் மேலாக இருப்பது கூடாது. ஆனால், கலந்துள்ள குவாரி டஸ்ட் மேலே குறிப்பிட்ட அளவுக்கும் மேல் இருப்பதை அறிந்து கொள்வது சற்று சிரமம்தான். இந்த சிக்கலை தீர்க்க சல்லடை முறையை பயன்படுத்தலாம். அதாவது, 75 மைக்ரான் அளவு கொண்ட சல்லடையில் ‘எம்-சாண்ட்’ மணலை 3 கைப்பிடி அளவு கொட்டப்பட்டு, அதன் மேற்பரப்பில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அதன் மூலம் 75 மைக்ரான் அளவுக்கும் கீழ் உள்ள ‘டஸ்ட்’ வெளியேற்றப்பட்டு, மீதமுள்ள நுண் துகள்கள்தான் இருக்கும். இதன் அடிப்படையில் எம்-சாண்ட் தரம் பற்றி கண்டறிய இயலும். 

Next Story