வெள்ள நீர் பாதுகாப்பில் இயற்கை அமைப்புகள்


வெள்ள நீர் பாதுகாப்பில் இயற்கை அமைப்புகள்
x
தினத்தந்தி 7 July 2018 4:45 AM GMT (Updated: 7 July 2018 4:45 AM GMT)

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழை காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்ட அனுபவத்தை அனைவரும் உணர்ந்திருப்போம்.

வெள்ள நீர் சூழ்ந்த காரணத்தால் ஈ.சிஆர், ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி சாலை, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லுர், துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், சிட்லபாக்கம், கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், முடிச்சூர், பழைய பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், வண்டலுர், போரூர், குன்றத்துர், அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், அம்பத்தூர், ரெட்டேரி மற்றும் கொளத்தூர் ஆகிய பல பகுதிகளில் நடந்து வந்த கட்டுமான திட்டங்கள் தடைபட்டதோடு, ரியல் எஸ்டேட் வர்த்தக ரீதியாகவும் அதன் விளைவுகள் அமைந்தன.

கட்டிடங்களும், காலியிடமும்..

சென்னை மற்றும் அதன் புற நகர்ப்பகுதிகளில் சென்ற 1980-களில் கிட்டத்தட்ட 65 சதவிகித அளவுக்கு காலியிடம் இருந்தது. மீதியுள்ள 35 சதவிகித இடம் கட்டிடங்களாக அமைந்திருந்தது. ஆனால், 2015-ம் ஆண்டு கணக்குப்படி கிட்டத்தட்ட 25 சதவிகிதம் காலியிடமாகவும், மீதியுள்ள 75 சதவிகித அளவுக்கு கட்டிடங்கள் இருந்தன என்று பொதுவான ஒரு கணக்கீடு குறிப்பிடுகிறது.

நிலவியல் வல்லுனர்கள்

சென்னை மாநகர திட்டங்கள் 1 மற்றும் 2 மற்றும் நகர் ஊரமைப்புத் துறையால் வகுக்கப்பட்ட விதிமுறைகள் பல இடங்களில் முறையாக கடைப்பிடிக்காமல் கட்டுமானங்கள் அமைந்திருப்பதை வெள்ள நீர் எடுத்துக்காட்டியது என்று நிலவியல் வல்லுனர்கள் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. மேலும், சென்னையை சுற்றிலும் இயற்கையாக அமைந்த வெள்ள நீர் வடிவதற்கான நில அமைவுகள் மற்றும் இயற்கையாக அமைந்த வெள்ள தடுப்பு அமைப்புகள் பற்றி அவர்கள் குறிப்பிட்ட தகவல்களை இங்கே காணலாம்.

‘தாங்கல்’ அமைப்புகள்

செயற்கை வடிகால் முறைகள் எவ்வளவு அமைக்கப்பட்டாலும், மழை காரணமாக ஏற்படும் வெள்ள நீரைக் கட்டுப்படுத்துவதில் இயற்கையாக அமைந்த ‘தாங்கல்’ அமைப்புகள் முக்கியமான இடத்தை பெற்றிருக்கின்றன. அதாவது, பெரும் வெள்ள நீரை தேக்கி தாங்கக் கூடிய நிலவியல் அமைப்பு ‘தாங்கல்’ என்று சொல்லப்படுகிறது. அத்தகைய மூன்று அடுக்குகள் கொண்ட பாதுகாப்பான ‘தாங்கல்’ அமைப்பு தென் சென்னையில் இயற்கையாக அமைந்திருந்தது.

மூன்று அடுக்கு தாங்கல்

அதில் முதலாவது பாதுகாப்பு அடுக்காக அமைந்த தாங்கல் அமைப்புகளாக மடிப்பாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, நாராயணபுரம் ஏரி, வடக்குப்பட்டு ஏரி, நன்மங்கலம் ஏரி ஆகியவை அமைந்துள்ளன. இரண்டாவது பாதுகாப்பு தாங்கல் அமைப்பாக பக்கிங்ஹாம் கால்வாய்க்கு முன்னர் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி அமைந்துள்ளது. மூன்றாவது பாதுகாப்பு தாங்கல் அமைப்பாக கேளம்பாக்கத்தில் தொடங்கி மாமல்லபுரம் வரையிலும் சுமாராக 4 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள உப்பங்கழிகள் அமைந்துள்ளன.

அதன் அடிப்படையில் பெருமழை காரணமாக உருவான வெள்ள நீர் முதல் அடுக்கிலிருந்து வெளியேறும்போது, இரண்டாவது அடுக்கான பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் நிற்கும். பின்னர், அதிலிருந்து மூன்றாம் அடுக்கில் அமைந்த உப்பங்கழிகளில் தேங்கி நின்று, கடல் நீர் உள்வாங்கும் சமயத்தில் கடலுக்குள் சென்று கலந்து விடுவது இயற்கை.

மேற்கண்ட தாங்கல் அமைப்புகள் மத்திய சென்னையில் இல்லாத நிலையில், அடையாறு மற்றும் கூவம் ஆறு ஆகியவை இணைந்த அமைப்பு மூலம் வெள்ள நீர் கடல் பகுதிக்கு சென்று விடும். மேலும், வடசென்னை பகுதியில் புழல் ஏரி, செங்குன்றம் ஏரி மற்றும் சூரப்பட்டு ஏரி ஆகியவை தாங்கல் அமைப்புகளாக உள்ளன. அவற்றிலிருந்து வெளியேறக்கூடிய வெள்ள நீர் பக்கிம்ஹாம், கொசஸ்தலை உள்ளிட்ட கால்வாய்கள் மூலம் எண்ணூர் கழிமுகம் மூலம் கடலில் கலப்பது இயற்கையாகும்.

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள்


மேற்கண்ட மூன்று அமைப்புகள் மூலம் வெள்ள நீர் எளிதாக கடலில் கலப்பதை தடுக்கும்படியாக அமைக்கப்பட்ட தடுப்புகள் காரணமாக நகர்ப்பகுதிகளில் வெள்ளநீர் தன்னியல்பாக நுழைந்து தேங்கி நின்று பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மழை வெள்ளத்தை கட்டுப்படுத்தி, தக்க முறையில் வடிகால்கள் வழியாக வழிந்து செல்ல அரசு நிறைய திட்டங்களை மேற்கொண்டதோடு, இப்போதும் அவற்றை செயல்படுத்தி வருகிறது. மேலும், மேற்கண்ட வெள்ள நீர் தடுப்பு பகுதிகளில் கட்டுமானங்கள் அமைவதை தடுக்க, சென்னையின் வெளிப்பகுதிகளில் செயற்கை நகரங்கள் அமைக்கும் திட்டங்களை செயல்படுத்தும்போது, மழை வெள்ள பாதிப்புகள் எதிர்காலத்தில் கட்டுப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story