விரும்பிய நிறங்களில் வீடுகளுக்கு ‘பெயிண்டிங்’ செய்ய உதவும் ‘செயலி’


விரும்பிய நிறங்களில் வீடுகளுக்கு ‘பெயிண்டிங்’ செய்ய உதவும் ‘செயலி’
x
தினத்தந்தி 6 April 2019 7:44 AM GMT (Updated: 6 April 2019 7:44 AM GMT)

இன்றைய காலகட்ட கட்டுமான துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் பல்வேறு விதங்களில் உதவியாக அமைந்துள்ளன.

கட்டுமான துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் பல்வேறு விதங்களில் உதவியாக அமைந்துள்ளன. அந்த அடிப்படையில் செயல்படும் ‘மெய்நிகர் செயலிகள்’ ஒருவரது கனவு வீட்டை கண் முன்னால் கொண்டு வருகின்றன. வீடுகள், அதன் உள் கட்டமைப்புகள் மற்றும் சுவர்களுக்கான பெயிண்டிங் ஆகியவற்றை முன்கூட்டியே காட்சியாக காண பலரும் விரும்புகிறார்கள்.

அந்த நிலையில் வீட்டின் சுவர்களுக்கு வெவ்வேறு வண்ணங்களை தேர்வு செய்து அல்லது புதிய நிறத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒவ்வொரு அறைக்கும் ‘பெயிண்டிங்’ செய்து பார்க்கும் ‘மெய் நிகர்’ தொழில்நுட்பத்தை பெயிண்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருக்கின்றன.

உதவும் புதிய செயலி

பெயிண்டு சில்லரை விற்பனையாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், கட்டிட வடிமைப்பாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் பயன்படக்கூடிய விதத்தில் ‘பெயிண்ட் யுவர் ஹோம்’ (Paint Your Home App) என்ற செயலி மூலம் மேற்கண்ட பணியை செய்து கொள்ளலாம்.

வண்ணங்களை முன்கூட்டியே காணலாம்

அந்த வகையில் வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளின் உள்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் எவ்வித வண்ணத்தில் இருந்தால் அழகாக இருக்கும் என்று முன் கூட்டியே காண இயலும். அதாவது, நூற்றுக்கணக்கான வண்ண பெயிண்டுகளில் சிலவற்றை தேர்வு செய்து, அவற்றை சுவர்களுக்கு மெய்நிகர் முறையில் மேற்பூச்சாக அமைத்து அதன் தோற்றத்தை ‘கலர் விசுவலைசர்’ (Colour Visualizer) செயலி மூலம் கம்ப்யூட்டர் திரையில் காணலாம்.

அறைகளின் புகைப்படங்கள்

இந்த முறைப்படி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வீட்டு அறைகளின் சுவர்களுக்கான குறிப்பிட்ட வண்ணங்களை செயலி மூலம் தேர்ந்தெடுக்கலாம். அதற்கு வீட்டின் உள்புற தோற்றம், வெளிப்புற தோற்றம், ஹால், சமையலறை, படுக்கை அறை ஆகிய வண்ணம் பூசவேண்டிய அனைத்து சுவர்களையும் கேமரா அல்லது ஸ்மார்ட்போனில் படமாக எடுத்து, அவற்றை கணிணியில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வேண்டிய நிறங்கள் தேர்வு

பின்னர், ‘கலர் விசுவலைசர்’ பெயிண்டிங் செயலியில் அறைகளின் புகைப்படத்தை ஒவ்வொன்றாக பதிவேற்றவேண்டும். அதன் பிறகு, அவற்றை ஒவ்வொன்றாக திரையில் தோன்றும்படி செய்து, வண்ண பெயிண்டுகளின் தொகுப்பிலிருந்து வேண்டியவற்றை மெய்நிகர் முறைப்படி சுவர்களுக்கு பூசலாம். அவ்வாறு தேர்வு செய்த நிறங்கள் கச்சிதமாக பொருந்தவில்லை எனும் பட்சத்தில் வேறொன்றை தேர்வு செய்யலாம். இந்த முறையில் அனைத்து அறைகளின் சுவர்களுக்கும் தேவையான வண்ணங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

குடும்பத்தினர் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் இருந்தாலும்கூட அறை சுவர்களுக்கு வண்ணம் பூசப்பட்ட படங்களை அவர்களுக்கு அனுப்பி மாற்றங்கள் இருந்தால் அதையும் செய்து கொள்ள இயலும். அவர்களும் இந்த முறையில் வண்ணங்களை தேர்வு செய்து சுவர்களில் மேற்பூச்சாக அமைத்து அவற்றை படங்களாக அனுப்பி வைக்கலாம்.

விரும்பியபடி வீட்டின் தோற்றம்

அதன் பிறகு பெயிண்டிங் செய்யப்பட்ட அனைத்து சுவர்களையும் ஒவ்வொன்றாக கவனித்து தேர்வு செய்யப்பட்ட வண்ணங்களின் சாயல் மற்றும் அதன் பெயரை குறித்துக்கொண்டு, அவற்றை வாங்கி நிஜமான வீட்டு சுவர்களுக்கு மேற்பூச்சாக பயன்படுத்திக்கொள்ளலாம்.


Next Story