அறைகளின் உயிர் சக்தியை கூட்டும் வண்ண மீன்கள்


அறைகளின் உயிர் சக்தியை கூட்டும் வண்ண மீன்கள்
x
தினத்தந்தி 12 Oct 2019 11:29 AM GMT (Updated: 12 Oct 2019 11:29 AM GMT)

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும், அழகிய தொட்டியில் துள்ளி விளையாடும் வண்ண மீன்கள் கவர்ந்து இழுக்கின்றன. அறைகளில் உள்ள மனம் கவரும் பொருட்களில் முக்கியமான இடத்தை வண்ண மீன்கள் நீந்தும் தொட்டிகள் பெற்றுள்ளன.

நேர்மறை சக்திகள்

பொதுவாக, மீன் தொட்டிகளை வீடுகளின் வரவேற்பறையில் வைப்பது முறையாகும். பிற இடங்களில் அவற்றை வைக்கும்போதும், அறையின் முன் பகுதியை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, வீடுகளின் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் நீர் சக்தியையும், உயிர் சக்தியையும் குறிப்பிடும் வண்ண மீன் தொட்டிகள் வைக்கப்பட்டால் அந்த இடத்தில் இருக்கும் ‘பாசிட்டிவ் எனர்ஜி’ தூண்டப்படுவதாக வாஸ்து நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரபல மீன் வகைகள்

சீன நாட்டு வாஸ்து சாஸ்திரமான ‘பெங் சூயி’ முறைப்படி, அறைகளில் வண்ண மீன்களை வளர்ப்பது பல உலக நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. அத்தகைய மீன்களில் ‘ரெகுலர் கோல்டு’, ‘ரெட் கேப் கோல்டு’, ‘ஒரண்டா கோல்டு’, ‘சிங்கத்தலை கோல்டு’, ‘பேர்ல் ஸ்கேல் கோல்டு’, ‘ரூயிங் கோல்டு’ ‘பிளாக் மற்றும் சில்வர் மாலி’ மற்றும் ‘ஏஞ்சல்’ ஆகிய வண்ண மீன் வகைகள் உலக அளவில் பிரபலமாக இருக்கின்றன.

வாஸ்து மீன்கள்

மேலும், வாஸ்து மீன்களாக சொல்லப்படும் ‘புளோரா’ மற்றும் ‘அரவானா’ ஆகியவை விலை உயர்ந்தவையாக இருந்தாலும், அவற்றுக்கும் உலக நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, ‘கிரீன் ஸ்னோவொயிட்’, ‘சில்வர் பிளாக்’ ஆகிய மீன்கள் விலை அதிகமாக இருந்தாலும் அவற்றை வளர்ப்பதிலும் பலர் ஆர்வமாக உள்ளனர். இந்திய வண்ண மீன் வகைகளில் ‘மாலிஸ்’, ‘கோல்டு பிஷ்’, ‘ஏஞ்சல்’, ‘டெட்ராஸ்’, ‘கப்பீஸ் பார்ஸ்’, ‘பைட்டர்’ மற்றும் ‘ரான்சூ கோல்டு பிஷ்’ ஆகியவையும் பிரபலமாக உள்ளன.

அதிக உணவு கூடாது

அறைகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு பிரத்யேகமான உணவு வகைகள் கடைகளில் கிடைக்கின்றன. ‘தையோ’, ‘டோக்கியோ’, ‘ட்ராகோ’ போன்ற ‘பிராண்டடு’ உணவு வகைகள், வைட்டமின் உணவுகள், பதப்படுத்தப்பட்ட ‘டிரை வார்ம்ஸ்’ போன்ற உணவு வகைகளை தினமும் இரண்டு முறை மீன்களுக்கு அளித்தால் போதுமானது. உணவு அதிகமாக போடப்பட்டால் மீன்கள் அவற்றை உற்சாகமாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும். ஆனால், அதிகப்படியான உணவு செரிமானம் ஆகாமல் மீன்கள் இறந்து விடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.


Next Story