வாஸ்து குறிப்பிடும் கட்டமைப்புகளுக்கான அடிப்படை வரைபடம்


வாஸ்து   குறிப்பிடும்   கட்டமைப்புகளுக்கான   அடிப்படை   வரைபடம்
x
தினத்தந்தி 7 Feb 2020 10:30 PM GMT (Updated: 7 Feb 2020 11:59 AM GMT)

பூமியில் அமைந்துள்ள அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் எவ்விதமான கட்டமைப்பாக இருந்தாலும் அதற்கான வரைபடம் அவசியமானது.

பூமியில் அமைந்துள்ள அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் எவ்விதமான கட்டமைப்பாக இருந்தாலும் அதற்கான வரைபடம் அவசியமானது. அதன் அடிப்படையில், எக்காலத்துக்கும் பொருந்தும் நிலையான வரைபடமாக  ‘வாஸ்து புரு‌ஷ மண்டலம்’ சொல்லப்படுகிறது. அது, குறிப்பிட்ட ஒரு பகுதியில், பிரபஞ்ச சக்தி என்ற ‘காஸ்மிக் எனர்ஜி’ செயல்படும் முறை பற்றி சொல்கிறது. அதனை அடிப்படையாக கொண்டே வீடுகள், வர்த்தக கட்டமைப்புகள், கோவில் உள்ளிட்ட கட்டிடங்கள் திட்டமிட்டு அமைக்கப்படுகின்றன.

இடத்திற்கேற்ற கட்டமைப்பு

‘வாஸ்து புரு‌ஷ மண்டலம்’ என்பது சதுரமான வடிவத்தில் அமைந்து, எட்டு திசைகள் மற்றும் பிரம்மஸ்தானம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. ஒவ்வொரு பாகத்திலும் எவ்விதமான அமைப்புகள் கட்டப்பட வேண்டும் என்ற குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து பாகங்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருந்தாலும், வாஸ்து புரு‌ஷனின் தலை, இருதயம், மார்பு, நாபி ஆகிய பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. அந்த பகுதிகளில் அதிக எடை கொண்ட கட்டுமானங்கள் அமைப்பது, பொருட்கள் வைப்பது அல்லது தூண்கள் கட்டமைப்பு ஆகியவை தவிர்க்கப்பட்டன.

மாதங்களில் நான்கு பிரிவுகள்

சூரியப் பாதையின் தென் திசை நகர்வான தட்சிணாயனம் மற்றும் வட திசை நகர்வான உத்தராயணம் ஆகிய காலங்களில் வீடுகளுக்கு கிடைக்கும் வெப்பம், வெளிச்சம், மழை மற்றும் காற்று வீசும் திசை ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதன் அடிப்படையில், மார்ச் முதல் மே மாதம் வரை வடக்கு திசையும், ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை தெற்கு திசையும், செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை கிழக்கு திசையும், டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை மேற்கு திசையும் முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிடப்பட்டன. அதற்கு ஏற்பவே கட்டிடங்களின் தலைவாசல்கள் அமைக்கப்பட்டன.  

ஆறு பருவ காலங்கள்

கட்டுமான அமைப்பில் பூமியின் சுழற்சிக்கேற்ப சூரியன், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இடமாற்றம் கணக்கில் கொள்ளப்பட்டது. அத்துடன் ஒரு ஆண்டில் வரக்கூடிய 6 பருவங்களான கார் காலம், குளிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் ஆகியவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. 

மனித செயல்பாடுகள்

பூமியின் சுழற்சிக்கேற்பவும், குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் இருக்கும் நிலைக்கேற்பவும் மனிதர்களின் உடல் மற்றும் மன இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுவது அறியப்பட்டது. அவை, மனிதர்களின் உடல் மற்றும் மன நலன்களுக்கு ஒத்திசைவாக செயல்படும் வகையில் கட்டிடங்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. சூரியன் மூலம் பெறக்கூடிய நன்மைகளை அதிகரிக்கும் விதமாக, வீட்டின் பாகங்கள் 8 பிரிவுகளாக  திட்டமிடப்பட்டது. 

ஒரு நாளின் 24 மணி நேரமானது, எட்டு திசைகளை கருத்தில் கொண்டு 8 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட ஒரு திசையின் இயல்பான தன்மைகள், மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளின் மீது தாக்கம் செலுத்துவதாக அறியப்பட்டு, அதன் அடிப்படையில் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு அமையாத வீடுகளில் அமைதியற்ற சூழல்கள் உருவாகின்றன என்பதும் அனுபவ ரீதியாக உணரப்பட்டது.

Next Story