சாதாரண எலக்ட்ரீசியனின் மகன் கோடீஸ்வரர் ஆனார்.. ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை அணியால் எடுக்கப்பட்ட திலக் வர்மா!


சாதாரண எலக்ட்ரீசியனின் மகன் கோடீஸ்வரர் ஆனார்.. ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை அணியால் எடுக்கப்பட்ட திலக் வர்மா!
x
தினத்தந்தி 14 Feb 2022 10:46 AM GMT (Updated: 14 Feb 2022 10:46 AM GMT)

ஐ.பி.எல் மெகா ஏலத்தில் திலக் வர்மா ரூ.1.7 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 வது நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஐ பி எல் மெகா ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய இளம் வீரர் திலக் வர்மா.

ஐ பி எல் மெகா ஏலத்தில் அவர் ரூ.1.7 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஏலத்தில் அவருக்கு அடிப்படை தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை ஏலத்தில் எடுக்க மும்பை, சென்னை, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் கடும் போட்டி போட்டன. முடிவில் மும்பை அணி அவரை எடுத்தது.

இதன்மூலம், சாதாரண எலக்ட்ரீசியனின் மகனாக இருந்த திலக் வர்மா கோடீஸ்வரர் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

இளம் வயதிலேயே அவருடைய சிறப்பான கிரிக்கெட் விளையாட்டு திறனை கண்ட பயிற்சியாளர் சலாம் பயஷ், அவருக்கு பயிற்சி அளித்து ஆட்டத்திறன்களை மெருகேற்றி சர்வதேச தரத்திலான வீரராக உருவாக்கினார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த திலக் வர்மாவுக்கு, பயிற்சியாளர் சலாம் பயஷ் தன்னுடைய வீட்டிலேயே உணவு மற்றும் தங்கும் வசதிகள் போன்றவற்றையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

திலக் வர்மாவின் தந்தை நம்பூதிரி நாகராஜுவின் குறைந்த வருமானத்தை கொண்டு அவருடைய குடும்பத்தை நடத்துவதே சிரமமான காரியமாக இருந்த நிலையில், வர்மாவை கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்க்க வசதியில்லை. இந்த நிலையில் தான், இரட்சகராக உருவெடுத்தார் பயிற்சியாளர் சலாம் பயஷ். 

இதுகுறித்து வர்மா அளித்த பேட்டியில், “என்னை பற்றிய செய்தி வெளியாவது இருக்கட்டும், ஆனால், பயிற்சியாளர் சலாம் பயஷ் பற்றி கண்டிப்பாக அதில் குறிப்பிட வேண்டும். அவருடைஅய ஆதரவினால் தான் நான் இங்கு இப்போது நிற்கிறேன்” என்று கேட்டுகொண்டார். 

“என்னை மறந்தாலும் என் பயிற்சியாளரை மறந்து விடாதீர்கள்” என்று கூறி தான் இந்த அளவுக்கு வளருவதற்கு காரணமாக இருந்த  பயிற்சியாளர் சலாம் பயஷ்க்கு நன்றி தெரிவித்துள்ளார் திலக் வர்மா.




இதுகுறித்து  பயிற்சியாளர் சலாம் பயஷ் கூறுகையில், “திலக் வர்மாவின் தொடர் முயற்சியின் பலனாக இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. எங்களுடைய கடினமான தொடர் பயணத்தின் பலன் இது. வர்மா இன்னும் நிறைய தூரம் போக வேண்டியுள்ளது. அதற்கு மும்பை அணி சரியான இடம். அவர் பேட்டிங்கில் 3-வது வீரராக களமிறங்க பொருத்தமானவராக இருப்பார். மேலும், ஒரு பினிஷராக விளையாடுவதற்கும் விருப்பப்படுபவர்.



19 வயதான இளம் வீரர் திலக் வர்மா, ரஞ்சி டிராபி தொடரில் 3 ஆண்டுகளாக ஆந்திரா அணிக்காக விளையாடி வருகிறார். மேலும், 2020ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்று விளையாடினார். தொடர்ந்து விஜய் ஹசாரே கோப்பை மற்றும் சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் சிறப்பாக விளையாடி,  7 போட்டிகளில் 147.26 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 215 ரன்கள் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story