ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் வீரர் உமர்குல் நியமனம்

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார்.
லாகூர்,
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான உமர்குல் 2020-ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். அதன்பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளராக செயல்பட்டார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏப்ரல் 4-ந் தேதி அணியில் இணைவார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான உடன்படிக்கையின்படி, உமர்குல் அணியுடன் மூன்று வார காலம் பணியாற்றுவார். அவரது பணி திருப்திகரமாக இருந்தால் அவரது பதவிகாலம் நீட்டிக்கப்படலாம்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர்குல் கூறியதாவது:-
உள்ளூர் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்த நிலையில் தற்போது சர்வதேச அணியில் பயிற்சியாளராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் உதவியாக இருப்பேன். எனது அனுபவத்தை அவர்களுக்கு சிறந்த முறையில் வழங்குவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story