8 அணிகள் பலப்பரீட்சை: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி கோவையில் நாளை தொடக்கம்


8 அணிகள் பலப்பரீட்சை: டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி கோவையில் நாளை தொடக்கம்
x

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அதிகபட்சமாக 4 முறை (2017, 2019, 2021, 2022) டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றியது. கடந்த முறை கோவை கிங்சுடன் இணைந்து கூட்டாக பட்டம் பெற்றது. டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018), கோவை கிங்ஸ் (2022) தலா ஒரு தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் நாளை (திங்கட் கிழமை) தொடங்குகிறது. ஜூலை 12-ந்தேதி வரை திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் களான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், முன்னாள் சாம்பியனான மதுரை பாந்தர்ஸ், மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஜூலை 5-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைகிறது. லீக் சுற்றில் கோவையில் 6 ஆட்டமும், திண்டுக்கல்லில் 7 போட்டியும், சேலத்தில் 8 ஆட்டமும், நெல்லையில் 7 ஆட்டமும் நடத்தப்படுகிறது. 28 லீக் ஆட்டம் உள்பட மொத்தம் 32 போட்டிகள் 25 தினங்களில் நடக்கிறது. 7 நாட்களில் மட்டும் 2 போட்டிகள் நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்று போட்டிகள் ஜூலை 7-ந் தேதி தொடங்குகிறது. அன்று முதல் தகுதி சுற்றும் (குவாலி பையர்-1), 8-ந் தேதி வெளியேற்றுதல் ஆட்டமும் (எலிமினேட்டர்) சேலத்தில் நடக்கிறது. 2- வது தகுதி சுற்று (குவாலி பையர் -2) 10-ந்தேதியும், இறுதிப் போட்டி 12-ந்தேதி யும் நெல்லையில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் தான் முதல் முறையாக ஐ.பி.எல். போட்டியை போல வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டனர். கடந்த 6 தொடரில் வரைவு முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஐ.பி.எல்.லை போன்று டி.என்.பி.எல். போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் (இம்பேக்ட்) விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையும் முதல் முறை யாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதே நேரத்தில் வைடு, நோபால் டி.ஆர்.எஸ். முறையில் கொண்டு வரப்படமாட்டாது. பிளேஆப் சுற்றின் 3 ஆட்டமும், இறுதிப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்றுதினத்தில் (ரிசர்வ் டே) நடைபெறும். கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நாளை (12-ந் தேதி) இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

வெற்றியுடன் கணக்கை தொடங்கப் போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 4 முறை டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சை 13-ந் தேதி சந்திக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது தடவையாக சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்தப் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும். 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும். 5 முதல் 8-வது இடங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் வழங்கப்படும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்.டி சேனல்களில் டி.என்.பி.எல் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Next Story