"சில நேரங்களில் அமைதியே சிறந்த பதில்"- பும்ராவின் இன்ஸ்டா பதிவு வைரல்


சில நேரங்களில் அமைதியே சிறந்த பதில்- பும்ராவின் இன்ஸ்டா பதிவு வைரல்
x
தினத்தந்தி 28 Nov 2023 8:25 PM GMT (Updated: 28 Nov 2023 10:32 PM GMT)

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2013-ம் ஆண்டு முதல் பும்ரா விளையாடி வருகிறார்.

மும்பை,

17-வது ஜ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச்சில் தொடங்குகிறது. இந்த சீசனில் மிகப்பெரிய பரிமாற்றமாக குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். ரோகித் சர்மாவுக்கு பிறகு அவர் தான் மும்பை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வித்தியாசமான ஒரு பதிவில், "சில நேரங்களில் அமைதியே சிறந்த பதில்" என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவரும் வேறு அணிக்கு தாவப்போகிறாரா என்று சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கியுள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் மும்பை அணியின் சமூக வலைத்தளத்தை பின்தொடர்வதையும் பும்ரா நிறுத்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2013-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் பும்ராவும் கேப்டனுக்கான ரேசில் இருந்தார். பாண்ட்யாவின் வரவால் இனி அவருக்கு கேப்டன்ஷிப் கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் மும்பை அணி நிர்வாகம் மீது அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வெளிப்படையாக இது குறித்து எதுவும் சொல்லவில்லை.


Next Story