ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்...! ஹர்மன்பிரீத் கவுர் செயல் குறித்து அப்ரிடி விமர்சனம்..!


ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்...!  ஹர்மன்பிரீத் கவுர் செயல் குறித்து அப்ரிடி விமர்சனம்..!
x
தினத்தந்தி 26 July 2023 11:45 AM GMT (Updated: 26 July 2023 11:50 AM GMT)

நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் அணி வங்காளதேசம் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது . டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வென்றது. ஒருநாள் போட்டி தொடரில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தவேளையில் 3வது போட்டி டிராவில் முடிந்தது

வங்காளதேச அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்டால் அடித்து உடைத்ததுடன், நடுவர்களையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.

இதனால் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது. மேலும், அவரது போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த தண்டனையால் ஹர்மன்பிரீத் கவுரால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளை விளையாட முடியாமல் போகும். இந்நிலையில், ஹர்மன்பிரீத் செயலை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கடந்த காலங்களிலும் நாம் இவற்றைப் பார்த்திருக்கிறோம். இருப்பினும், பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. களத்தில் அவரது இந்த செயல்பாடு அதிகமாகவே இருந்தது.

ஐசிசியின் கீழ் இது ஒரு பெரிய நிகழ்வு. நீங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருக்கையில் உங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story