கோவா அணிக்கு மாறுகிறார், அர்ஜூன் தெண்டுல்கர்..!


கோவா அணிக்கு மாறுகிறார், அர்ஜூன் தெண்டுல்கர்..!
x

அர்ஜூன் தெண்டுல்கர் மும்பை அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 22 வயதான அர்ஜூன் 2020-21-ம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடினார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதே போல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தாலும் இந்த சீசனில் ஒரு ஆட்டத்திலும் களம் இறக்கப்படவில்லை.

இந்த நிலையில் அவர் மும்பை அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். அண்டை மாநிலமான கோவா அணிக்காக விளையாட திட்டமிட்டுள்ள அர்ஜூன், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.

'அர்ஜூன் மைதானத்தில் நீண்ட நேரம் விளையாட வேண்டியது முக்கியம். அணி மாறுவதன் மூலம் நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அவரது ஆட்டத்திறன் மேம்படும் என்று நம்புகிறோம். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய கட்டத்தை தொடங்குகிறார்' என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story