பந்துவீச்சில் மிரட்டிய வங்காளதேச அணி..! 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா


பந்துவீச்சில் மிரட்டிய வங்காளதேச அணி..!  186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா
x
தினத்தந்தி 4 Dec 2022 9:24 AM GMT (Updated: 4 Dec 2022 9:26 AM GMT)

187 ரன்கள் இலக்குடன் வங்காளதேச அணி விளையாடி வருகிறது.

மிர்புர்,

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அண்மையில் நடந்த நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கின்றனர். முன்னணி வீரர்கள் திரும்பி இருப்பதால் அணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் முதலாவது ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா ,ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான் , 7 ரன்களிலும் , ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர்.பின்னர் வந்த விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து வந்த வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். நிலைத்து ஆடிய அவர் அரைசதம் அடித்தார்.மறுபுறம் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் 41.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக ராகுல் 73ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வங்காளதேச அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும் ,எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 187 ரன்கள் இலக்குடன் வங்காளதேச அணி விளையாடி வருகிறது.


Next Story