ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு


ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு
x

Image Courtesy : AFP 

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார்.

லண்டன்,

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்ததை அடுத்து இவர் இந்த ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் தூணாக இவர் விளங்கி வருகிறார். குறிப்பாக 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் இன்று அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு முடிவு குறித்து அவர் கூறுகையில், "நாளை டர்ஹாமில் நடக்கும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்காக எனது கடைசி ஆட்டத்தை விளையாடுகிறேன். இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத கடினமான முடிவாகும். இங்கிலாந்துக்காக எனது நண்பர்களுடன் விளையாடும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். ஒரு நம்பமுடியாத பயணத்தை நாங்கள் செய்துள்ளோம்" என தெரிவித்தார்.

ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்காக 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,919 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story