'மன்கட்' முறையில் ரன்-அவுட் செய்த தீப்தி - அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து அணியினர்..!


மன்கட் முறையில் ரன்-அவுட் செய்த தீப்தி - அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து அணியினர்..!
x

Image Courtesy : Twitter 

தினத்தந்தி 25 Sep 2022 3:53 AM GMT (Updated: 25 Sep 2022 3:59 AM GMT)

'மன்கட்' முறை ரன் அவுட்டால் தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணியை வேதனை அடைய வைத்தது

லண்டன்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. .இறுதியில் இந்திய அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 68 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இங்கிலாந்து அணி 43.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றியது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 39 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி ஒரு விக்கெட்டை வைத்துக்கொண்டு கடுமையான சூழலில் விளையாடிக்கொண்டிருந்தது .இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது.அனால் இங்கிலாந்து அணிக்கு கடைசி விக்கெட் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்தது.இதன்மூலம் இந்தியா கடைசி விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் வெற்றிபெற்றது.

தீப்தி ஷர்மா அந்த கடைசி விக்கெட்டை மங்கட் முறையை பயன்படுத்தி ரன் அவுட் செய்தார் .ஆட்டத்தின் 43-வது ஓவரின் 4வது பந்தை இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா வீசிய போது அந்த பந்தை ப்ரேயா டேவிஸ் எதிர்கொண்டார் .

எதிர் முனையில் இங்கிலாந்து அணி வீராங்கனை சார்லீ டீன் நின்றார் .ஆனால் தீப்தி ஷர்மா பந்துவீசுவதற்குள் கிரீஸை தாண்டி பல அடிகள் நகர்ந்து முன்னே சென்றுவிட்டார் சார்லீ டீன் .இதை பயன்படுத்திக்கொண்ட தீப்தி, பந்தை வீசாமல் ஸ்டம்ப்பில் அடித்து சார்லீ டீன்-ஐ அவுட் செய்தார்.இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து நடுவர் ரீவியூ செய்தபிறகு ஐசிசியின் புதிய கிரிக்கெட் விதிகளின்படி அவுட் கொடுக்கப்பட்டது.இதனை கண்டுகொண்டிருந்த இங்கிலாந்து அணியினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.விறுவிறுப்பான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் 'மன்கட்' முறை ரன் அவுட்டால் தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணியை வேதனை அடைய வைத்தது

இந்த ரன் அவுட் இதற்கு முன் 'மன்கட்' என அழைக்கப்பட்டது.ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஐசிசி புதிய விதிகளின் படி இது ரன் அவுட்டாக எடுத்து கொள்ளப்படும்.அதன்படி இதனை ரன் அவுட் என்று ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆனால் இதற்கு இங்கிலாந்து அணி வீர்ரகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Next Story