2வது ஒருநாள் போட்டியில் தோல்வி..! வரலாற்றில் மோசமான சாதனையை பதிவு செய்த இந்திய அணி..!


2வது ஒருநாள் போட்டியில் தோல்வி..! வரலாற்றில் மோசமான சாதனையை பதிவு செய்த இந்திய அணி..!
x
தினத்தந்தி 19 March 2023 2:15 PM GMT (Updated: 19 March 2023 2:17 PM GMT)

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றுள்ளது

விசாகப்பட்டினம்,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சும்பன் கில் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் கில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றினார். இதையடுத்து ரோகித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதில் கேப்டன் ரோகித் 13 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் கடந்த ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் முதல் பந்திலேயே அவுட் ஆனார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 31 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து களம் இறங்கிய ராகுல் 9 ரன், ஹர்த்திக் பாண்ட்யா 1 ரன், ஜடேஜா 16 ரன், குல்தீப் 4 ரன், ஷமி 0 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகினர்.

இறுதியில் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது தொடக்க வீரர்களாக மிட்சேல் மார்ஷ் , டிரேவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.இருவரும் இணைந்தது பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் 11 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . மார்ஷ் 36பந்துகளில் 66 ரன்கள் , ஹெட் 30பந்துகளில் 51ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றுள்ளது. 3வது ஒருநாள் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது

இந்தநிலையில், இந்த தோல்வியால் இந்திய அணி மிக மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.118 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி வெறும் 66 பந்துகளில் எட்டியது. 234 பந்துகள் மீதம் இருந்தது .இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான வரலாற்றில் அதிக பந்துகள் மீதம் இருந்த நிலையில் தோல்வியை சந்தித்த அணி என்ற மிக மோசமான சாதனையில் இந்திய அணி இடம்பிடித்துள்ளது.


Next Story