புதுச்சேரியில் தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டி: தெற்கு மண்டலம் 'ஹாட்ரிக்' வெற்றி


புதுச்சேரியில் தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டி: தெற்கு மண்டலம் ஹாட்ரிக் வெற்றி
x
தினத்தந்தி 28 July 2023 10:35 PM GMT (Updated: 28 July 2023 10:58 PM GMT)

தெற்கு மண்டலம் 19.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதுச்சேரி,

6 மண்டல அணிகள் பங்கேற்றுள்ள தியோதர் கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் தெற்கு மண்டலம்- வடகிழக்கு மண்டல அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வடகிழக்கு மண்டலம் 49.2 ஓவர்களில் 136 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

தெற்கு மண்டலம் தரப்பில் வித்வாத் கவீரப்பா, சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 7 ஓவர்களில் 2 மெய்டனுடன் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். தெற்கு மண்டல பவுலர்கள் மொத்தம் 12 ஓவர்களை மெய்டன்களாக வீசியது கவனிக்கத்தக்கது.

அடுத்து களம் இறங்கிய தெற்கு மண்டலம் 19.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றியை பெற்றது. ரோகன் குன்னுமால் (87 ரன், 58 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்), ஜெகதீசன் (15 ரன்) களத்தில் இருந்தனர். கேப்டன் மயங்க் அகர்வால் 32 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசித்த தெற்கு மண்டலம் 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.


Next Story