3 நாட்கள் இடைவெளியில் முதல் தர போட்டிகளை விளையாடுவது கடினம் - ஷர்துல் தாக்கூர்


3 நாட்கள் இடைவெளியில் முதல் தர போட்டிகளை விளையாடுவது கடினம் - ஷர்துல் தாக்கூர்
x

Image Courtesy: @BCCIdomestic

தினத்தந்தி 3 March 2024 9:08 PM GMT (Updated: 3 March 2024 10:01 PM GMT)

அடுத்த வருடம் அதிக இடைவெளி இருக்கும் அளவுக்கு போட்டி அட்டவணையை வடிவமைக்க வேண்டும்.

மும்பை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி மும்பையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

முடிவில் தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்டது. மும்பை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை இன்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 100 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 353 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் மும்பை அணி தற்போது வரை 207 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் சதம் (109 ரன்) அடித்து அசத்தினார். மும்பை தரப்பில் தனுஷ் கோட்யான் 74 ரன்னுடனும், துஷார் தேஷ்பாண்டே 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்திற்கு பின் ஷர்துல் தாக்கூர் அளித்த பேட்டியில் கூறியதாவது, 3 நாட்கள் இடைவெளியில் முதல் தர போட்டிகளை விளையாடுவது கடினம். ரஞ்சிக் கோப்பையில் நான் விளையாடத் துவங்கிய போது முதல் 3 போட்டிக்கு 3 நாட்கள் இடைவெளியும் பின்னர் 4 நாட்கள் இடைவெளியும் இருக்கும்.

நாக் அவுட் போட்டிகளுக்கு 5 நாட்கள் இடைவெளி இருக்கும். ஆனால் இப்போது அனைத்து போட்டிகளும் 3 நாட்கள் இடைவெளியில் நடைபெறுகிறது. அப்படி பைனல் வரை செல்லும் அணி 3 நாட்கள் இடைவெளியில் 10 போட்டியில் விளையாடுவது மிகவும் கடினமாகும்.

எடுத்துக்காட்டாக எங்களுடைய வீரர் மோகித் 5 போட்டியில் விளையாடி 6-வது போட்டியில் காயத்தை சந்தித்தார். எனவே அடுத்த வருடம் அதிக இடைவெளி இருக்கும் அளவுக்கு போட்டி அட்டவணையை வடிவமைக்க வேண்டும். ஏனெனில் இப்படி தொடர்ந்து ஓரிரு வருடங்கள் விளையாடினால் நம்முடைய நாட்டில் உள்ள பெரும்பாலான உள்ளூர் வீரர்கள் காயத்தை சந்திப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story