ஐபிஎல் இறுதிப்போட்டி : குஜராத் அணிக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்


ஐபிஎல் இறுதிப்போட்டி : குஜராத் அணிக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்
x

Image Courtesy : Twitter @IPL 

குஜராத் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

அகமதாபாத்,

கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா கலை நிகழ்ச்சிகள் மிக கோலாகலமாக நிறைவு பெற்றதை அடுத்து போட்டி தொடங்கியது

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து பட்லர் உடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார். பவுண்டரி மூலம் ரன் கணக்கை தொடங்கிய சாம்சன் குஜராத் கேப்டன் ஹர்திக் வீசிய பந்தில் சாய் கிசோர்-யிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து படிக்கல் களமிறங்கினார்.

ஒரு பக்கம் பட்லர் சிறிது அதிரடி காட்ட தொடங்க மறுபக்கம் விக்கெட் வீழ்ச்சி தொடர்ந்தது. அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 39 ரன்கள் எடுத்து பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிம்ரன் ஹெட்மயர் விக்கெட்டை தானே பந்துவீசி தானே கேட்ச்-யும் பிடித்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா.

அதை தொடர்ந்து வந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.


Next Story