ஹர்திக் பாண்டியாவால் எத்தனை போட்டிகளில் 4 ஓவர்கள் பந்துவீச முடியும் ? - முன்னாள் வீரர் கேள்வி


ஹர்திக் பாண்டியாவால் எத்தனை போட்டிகளில் 4 ஓவர்கள் பந்துவீச முடியும் ? - முன்னாள் வீரர் கேள்வி
x

Image Courtesy : BCCI 

தினத்தந்தி 3 Jun 2022 7:38 AM GMT (Updated: 3 Jun 2022 7:41 AM GMT)

ஐபிஎல் இறுதி போட்டியில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மகுடம் சூடியது. அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடித்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார்.

உடல்தகுதி பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடருக்கு முன் அவர் அவ்வப்போது விளையாடிய போட்டிகளிலும் பந்துவீச வில்லை. இதனால் அவரது பந்துவீச்சு குறித்து கேள்வி எழுந்தது. இந்திய அணிக்கு திரும்பினாலும் அவரால் ஒரு முழு ஆல்ரவுண்டராக விளையாட முடியுமா என பலர் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் அனைவரையும் வியக்க செய்யும் வகையில் ஐபிஎல் தொடரில் பாண்டியா சிறப்பாக பந்துவீசி மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பாண்டியாவின் பந்துவீச்சு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " ஹர்திக் பாண்டியாவுக்கு பந்துவீசும் திறமை இருக்கிறது. இந்திய அணிக்கு பல போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். ஆனால் காயம் காரணமாக பல போட்டிகளில் அவரால் ஆடமுடியாமல் போனது. இப்போது காயத்திலிருந்து பாண்டியா திரும்பிவந்துள்ளார். 20 ஓவர் போட்டியில் 4 ஓவர்கள் வரை வீசுகிறார். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி வைத்துப் பார்த்தால் அவரால் எத்தனை போட்டிகளுக்கு 4 ஓவர்களை வீச முடியும் என்பது தெரியாது.

ஆல்ரவுண்டராக இருக்கும் பாண்டியா நிச்சயமாக பந்துவீச வேண்டும் என்பது தான் விருப்பம். ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு ஆட்டத்தையே மாற்றிவிட்டது. 4 ஓவர்களில் 3விக்கெட்டுகளை வீழ்த்தி பாண்டியா சிறப்பாகப் பந்துவீசினார். பேட்டிங்கிலும் விரைவாக 34 ரன்கள் சேர்த்தார். அவர் சிறந்த வீரராக விளங்கி வருகிறார். தொடர்ந்து அவர் அதை செய்யவேண்டும்" என அசாருதீன் தெரிவித்தார்.


Next Story