அம்மா தடுத்ததால்தான் இந்தியாவுக்காக விளையாடுகிறேன் ...இல்லையெனில்.. - பும்ரா


அம்மா தடுத்ததால்தான் இந்தியாவுக்காக விளையாடுகிறேன் ...இல்லையெனில்.. - பும்ரா
x

image courtesy:PTI

படிப்பை முடித்ததும் கனடா நாட்டுக்கு சென்று அங்கே கிரிக்கெட் விளையாட திட்டமிட்டிருந்ததாக பும்ரா கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார். கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகமான அவர் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

வித்தியாசமாக பந்து வீசும் பவுலிங் ஆக்சனை கொண்ட பும்ரா 2016-ல் அறிமுகமாகி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அசத்தியபோது மிகவும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் 2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான பும்ரா நம்பர் 1 பவுலராக முன்னேறி தன் மீதான விமர்சனங்களை பொய்யாக்கி சாதனை படைத்துள்ளார்.

மேலும் வேகப்பந்து வீச்சு துறையில் இந்தியா புதிய உச்சத்தை தொடுவதற்கு முக்கிய காரணமாகவும் திகழும் அவர் போட்டியின் எந்த நேரத்திலும் துல்லியமான யார்க்கரை வீசி வெற்றியை பெற்று தரக்கூடிய வீர்ராக உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் படிப்பை முடித்ததும் கனடா நாட்டுக்கு சென்று அங்கே கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு திட்டமிட்டிருந்ததாக பும்ரா கூறியுள்ளார். ஏனெனில் போட்டி மிகுந்த இந்திய அணியில் இடம் கிடைப்பது மிகவும் கடினம் என்று நினைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த சமயத்தில் தம்முடைய அம்மா அதை தடுத்ததால்தான் தற்போது இந்தியாவுக்காக விளையாடுவதாக பும்ரா கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் விளையாடி பெரிதாக சாதிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள். அதனால் நீங்கள் மாற்றுத்திட்டத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம். எனவே படிப்பை முடித்ததும் நான் கனடாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அங்கே என்னுடைய சொந்தக்காரர்கள் இருக்கின்றனர். அப்போது குடும்பமாக செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம்.

ஆனால் அந்த நேரம் என்னுடைய அம்மாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு வந்தது. எனவே கனடா போன்ற வேறு கலாச்சாரத்தை கொண்ட நாட்டுக்கு நான் செல்வதை அவர் விரும்பவில்லை. அதிர்ஷ்டவசமாக அது எனக்கு வேலை செய்தது. இல்லையென்றால் கனடா அணிக்காக விளையாட முயற்சித்திருப்பேன். இருப்பினும் அது வேலை செய்யாததால் தற்போது இந்தியா மற்றும் மும்பை அணிக்காக விளையாடுகிறேன்" என்று கூறினார்.


Next Story