"இந்த சீசன் முழுவதும் மஞ்சள் படை என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன்" - கேப்டன் டோனி நெகிழ்ச்சி!


இந்த சீசன் முழுவதும் மஞ்சள் படை என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன் - கேப்டன் டோனி நெகிழ்ச்சி!
x
தினத்தந்தி 28 April 2023 2:27 AM GMT (Updated: 28 April 2023 2:30 AM GMT)

இந்த சீசன் முழுவதும் மஞ்சள் படை என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன் என்று கேப்டன் டோனி கூறினார்.

ஜெய்ப்பூர்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், தீக்சனா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆடம் சாம்பா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.

நேற்றைய ஆட்டத்திற்கு பின் சிஎஸ்கே கேப்டன் டோனி கூறியதாவது:-

"முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். ஆடுகளமும் ராஜஸ்தானின் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்ததால், அவர்களுக்கு நிறைய ரன்கள் கிடைத்தது. பவுலர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக பந்து வீசினார்கள். அதிக ரன்கள் இலக்கு என்பதால் பவர் பிளேயில் நன்றாக விளையாடி இருக்க வேண்டும். ஆனால் பேட்டிங்கிலும் நல்ல தொடக்க இல்லை.

இந்த சீசன் முழுவதும் ரசிகர்கள் (மஞ்சள் படை) என்னை பின் தொடர்ந்து வருவார்கள் என நினைக்கிறேன். ஜெய்ப்பூர் என மனதுக்கு மிகவும் நெருக்கமான இடம். என் முதல் ஒருநாள் போட்டி சதம் வைசாக் மைதானத்தில் நிகழ்ந்தது. அது எனக்கு மேலும் 10 ஆட்டங்கள் ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால் நான் ஜெய்ப்பூரில் அடித்த 183 ரன்கள் எனக்கு மேலும் ஒரு வருட வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்தது." என்று தெரிவித்துள்ளார்.


நேற்றைய போட்டியிலும் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் இருந்தது போல எங்கும் பார்த்தாலும் சென்னை ரசிகர்கள் மஞ்சள் படையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story