கடைசி வரை நின்றிருந்தால் 'முச்சதம் அடித்திருப்பேன்' - இஷான் கிஷன்


கடைசி வரை நின்றிருந்தால் முச்சதம் அடித்திருப்பேன் - இஷான் கிஷன்
x

Image Courtesy: AFP 

வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இஷன் கிஷன் 210 ரன்கள் குவித்து அசத்தினார்.

சட்டோகிராம்,

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி நிர்ணயித்த 410 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணியில் இளம் வீரர் இஷன் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி அதிவேக இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். இரட்டை சதம் அடித்த அவர் அணியின் ஸ்கோர் 305 ரன்னாக உயர்ந்த போது (35.5 ஓவரில்) 210 ரன்கள் (131 பந்து, 24 பவுண்டரி, 10 சிக்சர்) எடுத்திருந்த நிலையில் தஸ்கின் அகமது பந்து வீச்சில் லிட்டான் தாஸ்சிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து அவர் இன்னிங்ஸ் இடைவேளையில் பேட்டி அளித்தார். ஒருநாள் போட்டியில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்து சரித்திரம் படைத்த இஷான் கிஷன் கூறுகையில்,

'14.1ஓவர்கள் மீதம் இருக்கையில் நான் ஆட்டம் இழந்தேன். கடைசி வரை நின்று இருந்தால் 300 ரன்கள் (முச்சதம்) அடித்து இருப்பேன். இரட்டை சதம் அடித்த ஜாம்பவான் வீரர்கள் பட்டியலுடன் எனது பெயரும் இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பிட்ச் பேட்டிங்குக்கு நன்றாக இருந்தது. நல்ல பந்தாக இருந்தால் அடித்து ஆடுவது என்பது தான் எனது திட்டமாகும். 95 ரன்னில் இருக்கையில் சிக்சர் விளாசி சதத்தை எட்டலாம் என்று விரும்பினேன்.

என்னுடன் பேட்டிங் செய்த விராட்கோலி முதல் சதம் என்பதால் நிதானமாக செயல்படுமாறு அறிவுறுத்தினார். நான் என்மீது அதிக அழுத்தம் கொடுக்காமல் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்'.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story