எந்த நட்சத்திர வீரரும், தான் இல்லாமல் இந்திய அணி இல்லை என்று நினைத்தால்... - கவாஸ்கர்


எந்த நட்சத்திர வீரரும், தான் இல்லாமல் இந்திய அணி இல்லை என்று நினைத்தால்... - கவாஸ்கர்
x
தினத்தந்தி 3 March 2024 3:25 AM GMT (Updated: 3 March 2024 3:37 AM GMT)

ஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இந்திய அணி கபாவில் மட்டுமல்லாமல் மெல்போர்னிலும் வென்றது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

மும்பை,

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பல்வேறு காரணங்களால் விலகியதை பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்துவோம் என்று மைக்கேல் ஆதர்டன் போன்ற இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். ஆனால் கடைசியில் ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களை வைத்தே இங்கிலாந்தை தோற்கடித்துள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை உலக அணிகளுக்கு மீண்டும் காண்பித்துள்ளது.

இந்நிலையில் 2020/21 பார்டர் - கவாஸ்கர் தொடரில் 36 ரன்களில் ஆல் அவுட்டாகி தவித்தபோது விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அத்தொடரின் கடைசி போட்டியில் இளம் வீரர்களை வைத்தே கபா கோட்டையை தகர்த்த இந்தியா தற்போதைய இங்கிலாந்து தொடரிலும் முக்கிய வீரர்கள் இல்லாமல் வென்று காண்பித்துள்ளதாக கவாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதை விட தாங்கள் இல்லாமல் இந்திய அணி இல்லை என்று நினைக்கும் சில நட்சத்திர வீரர்களுக்கு இந்த 2 தொடர்கள் சமர்ப்பணம் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

"ஆஸ்திரேலியாவில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல் தடுமாறிய இந்திய அணி கபாவில் மட்டுமல்லாமல் மெல்போர்னிலும் வென்றது. குறிப்பாக 36-ரன்களில் ஆல் அவுட்டான பின் மெல்போர்னில் வென்ற இந்தியா சிட்னியில் போராடி தோல்வியை தவிர்த்தது. ஒருவேளை அந்த போட்டியிலும் ரிஷப் பண்ட் நின்று விளையாடியிருந்தால் இந்தியா வென்றிருக்கும். ஆனால் அந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய இளம் வீரர்கள் காட்டிய தைரியம், சகிப்புத்தன்மை, துணிச்சல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை இந்த இங்கிலாந்து தொடரிலும் தெரிந்தன.

அதனால்தான் இந்தியா வெல்வதற்கு எப்போதும் பெரிய வீரர்கள் தேவையில்லை என்று நான் சொல்வேன். எனவே இங்கு நான் இல்லாமல் இந்திய அணி இல்லை என்று நினைக்கும் பெரிய வீரர்களுக்கு நீங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் நாங்கள் வெல்வோம் என்பதை இந்த 2 தொடர்களும் காட்டியுள்ளன. இதற்கான பாராட்டுகள் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அடங்கிய அணி நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும். இந்த தொடர் நம்மிடம் பெரிய வீரர்கள் இல்லாவிட்டாலும் உறுதியான மனம் கொண்ட வீரர்கள் இருந்தால் வெல்ல முடியும் என்பதை காண்பித்துள்ளது" என்று கூறினார்.


Next Story