உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு - பிசிசிஐ அதிரடி அறிவிப்பு...!


உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு - பிசிசிஐ அதிரடி அறிவிப்பு...!
x

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத் தொகையை அதிகரித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. இதையடுத்து ஆசிய கோப்பை, இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த கிரிக்கெட் தொடர்களுக்கு மத்தியில் இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளான ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே, துலீப் டிராபி, இரானி கோப்பை உள்ளிட்ட தொடர்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கான பரிசுத்தொகையை பிசிசிஐ உயர்த்தி உள்ளது. அதன் படி,

ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரஞ்சி கோப்பையில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசுத்தொகை ரூ. 1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரஞ்சி கோப்பை தொடரில் அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு பரிசுத்தொகை ரூ. 50 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், இரானி கோப்பை தொடரை வெல்பவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இரானி கோப்பையில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 25 லட்சம் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துலீப் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக பரிசுத்தொகை உயர்த்தப்படுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை ரூ.30 லட்சத்தில் இருந்து ரு.1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசுத்தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பேராசிரியர் டி பி தியோதர் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசுத்தொகை ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ. 80 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

சீனியர் பெண்கள் ஒரு நாள் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இர்ண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத்தொகை ரூ. 3 லட்சத்தில் ரூ. 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீனியர் பெண்கள் டி20 கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாகவும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாகவும் பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.



Next Story