இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் சென்னை வந்தனர்


இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் சென்னை வந்தனர்
x

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

சென்னை,

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

இந்த நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். வெவ்வேறு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள இரு அணி வீரர்களும் இன்று பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.

சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 7-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. ஆஸ்திரேலிய அணி இங்கு 5 ஆட்டத்தில் ஆடி அதில் 4-ல் வெற்றி பெற்றிருக்கிறது.


Next Story