ஐபிஎல் 2023: கொல்கத்தா அணியில் ஷகிப்புக்கு பதிலாக இங்கிலாந்தின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேர்ப்பு...!


ஐபிஎல் 2023: கொல்கத்தா அணியில் ஷகிப்புக்கு பதிலாக இங்கிலாந்தின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேர்ப்பு...!
x
தினத்தந்தி 5 April 2023 9:45 AM GMT (Updated: 5 April 2023 11:28 AM GMT)

சர்வதேச போட்டிகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஷகிப் அல் ஹசன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

கொல்கத்தா,

16வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்ல கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக நிதிஷ் ராணா கொல்கத்தா அணியை வழிநடத்துகிறார்.

இதையடுத்து சர்வதேச போட்டிகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ஷகிப் அல் ஹசன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக நடப்பு ஐபிஎல் தொடரில் ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயை அந்த அணி நிர்வாகம் ரூ. 2.8 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.




Next Story