ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலப்பட்டியலில் 333 வீரர்கள் - டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் பட்டேலின் தொடக்க விலை ரூ.2 கோடி..!


ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலப்பட்டியலில் 333 வீரர்கள் - டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் பட்டேலின் தொடக்க விலை ரூ.2 கோடி..!
x

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலப்பட்டியலில் மொத்தம் 333 பேர் இடம் பிடித்துள்ளனர்.

மும்பை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் வருகிற 19-ந்தேதி துபாயில் நடக்கிறது. ஏலப்பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. .

இவர்களில் 116 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 77 வீரர்கள் 10 அணிகளுக்காக எடுக்கப்பட உள்ளனர். வீரர்களை வாங்க அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.38 கோடியே 15 லட்சத்தை கையிருப்பாக வைத்துள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.31.4 கோடி இருப்புத்தொகை உள்ளது.

இந்த ஏலத்திம் 3 இந்திய வீரர்கள் (ஹர்ஷல் பட்டேல், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் ) உட்பட 23 வீரர்களின் அடிப்படை விலை அதிகபட்சம் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஹாரி புரூக் (இங்கிலாந்து), ஜெரால்டு கோட்ஜீ (தென்ஆப்பிரிக்கா), முஜீப் ரகுமான் (ஆப்கானிஸ்தான்) உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

மேலும், ஷாருக்கான், எம்.சித்தார்த், சந்தீப் வாரியர், ரித்திக் ஈஸ்வரன், பாபா அபராஜித், பிரதோஷ் பால், அஜிதேஷ், பாபா இந்திரஜித், குர்ஜப்னீத் சிங், ஜதாவேத் சுப்ரமணியன், சூர்யா ஆகிய 11 தமிழ்நாட்டு வீரர்களும் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர். இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட அதிரடி ஆல்-ரவுண்டர் ஷாருக்கானின் அடிப்படை விலை ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story