ஐ.பி.எல் :தவான் போராட்டம் வீண்...பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ


ஐ.பி.எல் :தவான் போராட்டம் வீண்...பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ
x

image courtesy: twitter/@LucknowIPL

தினத்தந்தி 30 March 2024 5:52 PM GMT (Updated: 30 March 2024 6:08 PM GMT)

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான் 70 ரன்கள் அடித்தார்.

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் , கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் கே.எல்.ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த படிக்கல் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் டி காக் சிறப்பாக ஆடினார். நிலைத்து ஆடி ரன்கள் குவித்த அவர் அரைசதமடித்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் , குருனால் பாண்டியா இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.

இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ரன்கள் , குருனால் பாண்டியா 22 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர் . பஞ்சாப் அணி சார்பில் சாம் கரன் 3 விக்கெட்டும் , அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். தவான் - பேர்ஸ்டோ இருவரும் இணைந்து 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பேர்ஸ்டோ 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களில் பிரப்சிம்ரன் சிங் 19 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தவான் போராடினார். ஆனால் மற்ற வீரர்களில் யாரும் அவருக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.

முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ 2-வது போட்டியில் விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான் 70 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளும், மோஷின் கான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.


Next Story