பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தங்களில் இருந்து இரு இளம் வீரர்கள் நீக்கம்..? - வெளியான தகவல்


பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தங்களில் இருந்து இரு இளம் வீரர்கள் நீக்கம்..? - வெளியான தகவல்
x

கோப்புப்படம்

ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய அணியின் இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பி.சி.சி.ஐ-யிடம் தெரிவித்தார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு உடனடியான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதன் பிறகு சில தொடர்களில் இஷான் கிஷன் ஓரங்கட்டப்பட்டார். மேலும் இஷான் கிஷனை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடச் சொல்லி பி.சி.சி.ஐ வலியுறுத்தியுறுத்தியது. ஆனால் அவர் ரஞ்சி தொடரில் விளையாடாமல் ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்தார்.

இவரை போல ஸ்ரேயாஸ் ஐயரையும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த பி.சி.சி.ஐ அவரை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்கும் படி என்.சி.ஏ-விற்கு உத்திரவிட்டிருந்தது.

அதன்படி என்.சி.ஏ மருத்துவர் பி.சி.சி.ஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஆகிய இருவரும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பது கேள்விகுறியாகி உள்ளது.


Next Story