லங்கா பிரிமீயர் லீக்: தம்புள்ளா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்ற பி-லவ் கேண்டி...!

Image Courtesy: @LPLT20
லங்கா பிரிமீயர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தம்புள்ளா ஆரா - பி-லவ் கேண்டி அணிகள் மோதின.
கொழும்பு,
லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 30ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தம்புள்ளா ஆரா மற்றும் பி-லவ் கேண்டி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தம்புள்ளா ஆரா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பெர்ணாண்டோ 5 ரன், குசல் மெண்டிஸ் 22 ரன், அடுத்து களம் இறங்கிய சமரவிக்ரமா 36 ரன், டி சில்வா 40 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் தம்புள்ளா ஆரா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களே எடுத்தது. இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பி-லவ் கேண்டி அணி களம் இறங்கியது.
கேண்டி அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஹாரிஸ் 26 ரன், காமிந்து மெண்டிஸ் 44 ரன் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இதையடுத்து களம் இறங்கிய சண்டிமால் 24 ரன், ஆசிப் அலி 19 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் கேண்டி அணி 19.5 ஓவர்களில் 5 விகெட்டை இழந்து 151 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேண்டி தரப்பில் மேத்யூஸ் 25 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இந்த ஆட்டத்தின் மேன் ஆப் தி மேட்ச் விருது மேத்யூஸ்-க்கும், தொடர் நாயகன் விருது, அதிக விக்கெட் எடுத்த வீரர் விருது, அதிக ரன் அடித்த வீரர் விருது, அதிக சிக்சர் அடித்த விருது போன்றவை வனிந்து ஹசரங்காவுக்கு வழங்கப்பட்டது.






